ADDED : ஆக 20, 2015 03:28 AM
மேலுார்:
மேலுார் அருகே கூலிபட்டியில் சிதிலமடைந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டடத்தை கிராமத்தினரே
சீரமைத்துள்ளனர்.
மேலுார் அருகே குறிச்சிப்பட்டி ஊராட்சி கூலிபட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு 1 முதல் 5 வகுப்புகளில் ஏராளமான குழந்தைகள் படிக்கின்றனர். வகுப்பறைகளின் தளம் மேடு, பள்ளமாக சிதிலமடைந்ததால் மாணவ, மாணவியர் அமர்ந்து படிக்க முடியாமல் அவதிக்குள்ளாயினர். கற்கள் குத்தி காயமேற்பட்டும், ஆடைகள் கிழிந்தும் போயின.
இது குறித்து கல்வி அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. பள்ளி தலைமை ஆசிரியை ரிஷ்வானா பேகம், உதவி ஆசிரியர் ராஜாமாணிக்கம், கல்விக் குழுத் தலைவர் பாண்டி, கிராம நிர்வாகிகள் அழகு, துரைச்சாமி, பார்த்திபன் மற்றும் பலர் பள்ளியை சீரமைத்து தனியார் பள்ளிக்கு இணையாக உயர்த்த திட்டமிட்டனர். அரபு நாடுகளில் பணிபுரியும் கிராம இளைஞர்களை தொடர்பு கொண்டனர். பள்ளியின் நிலை குறித்து வாட்ஸ்
அப் தகவல் அனுப்பினர். ஒன்றரை ஆண்டுகளில் பல லட்சம் ரூபாய்
வசூலானது.
இந்த பணத்தை கொண்டு சிதிலமடைந்த கட்டடத்தை சீரமைத்தனர். தரையில் டைல்ஸ் கற்கள் பதித்து, மாணவர்கள் படிக்க வட்ட மேஜைகள், மின்விசிறிகள் வாங்கி கொடுத்தனர். இன்று பள்ளி புதுப்பொலிவுடன் ஐந்து வகுப்புகளும் ஒரே அறையில் புதுப்பிக்கப்பட்ட கட்டடத்தில் செயல்படுகிறது.
