UPDATED : ஜூலை 06, 2026 04:25 PM
ADDED : ஜூலை 06, 2026 04:20 PM
கொட்டாம்பட்டி: புழுதி பட்டி காய்கறி வியாபாரி தங்கராஜ் 58. நேற்று காலை டூ வீலரில் பள்ளபட்டிக்கு சென்றார். எதிரே மற்றொரு டூவீலரில் பள்ளபட்டி முகமது ரிஸ்வான் 34, வந்தார். வெள்ளமலை பட்டி பிரிவில் திருச்சி - மதுரை நோக்கிச் சென்ற கார் இருவர் மீது மோதியது. இதில் தங்கராஜ் இறந்தார். முகமது ரிஸ்வான் மேலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொட்டாம் பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் திருடன் பலி
மேலுார்: திருப்புவனம் சீமை ராஜா 20. நேற்று அதிகாலை 4:00 மணியளவில் டூவீலரில் நண்பர் கமுதி சூர்யாவுடன் 21, பயன்பாட்டிற்கு வராத நான்கு வழிச்சாலையில் சென்றார். மேலூர் அருகே சென்டர் மீடியனில் டூவீலர் மோதியதில் சீமை ராஜா இறந்தார். சூர்யா மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். போலீசார் விசாரணையில், இருவரும் திருமயத்தில் ஜவுளிக்கடை பூட்டை உடைத்து திருடிவிட்டு தப்பி வந்த போது விபத்தில் சிக்கியதும், இருவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது.
மனைவி எரித்து கொலை :கணவர் கைது
மேலுார்: கொட்டகுடி பிரபா 30, இவரது மனைவி கோவில்பட்டி கார்த்திகா 24. இவர்களது மகள் தேகா ஸ்ரீ 3. கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்த நிலையில் பிரபாவிடம் தனது குழந்தையை கார்த்திகா கேட்டார். ஆத்திரமுற்ற பிரபா கார்த்திகாவை வயல் பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்து தீ வைத்து எரித்தார். நேற்று கொட்டகுடி வி.ஏ.ஓ., செல்லத்திடம் சரணடைந்தார். மேலுார் போலீசார் கைது செய்தனர்.
தொழிலாளி பலி : இருவர் காயம்
மேலுார்: சருகு வலையபட்டி சிவா 19. மேலுார் - - காரைக்குடி நான்கு வழிச்சாலை அமைக்கும் நிறுவனத்தின் ஒப்பந்த ஊழியர். நேற்று காலை டூ வீலரில் அதே ஊரைச் சேர்ந்த சஞ்சய் 20, அழகர்சாமியுடன் 20, வேலைக்கு சென்றார். சேண்டலை நான்கு வழிச்சாலையில் டூ வீலரில் நின்ற போது காரைக்குடி -- மேலுார் கார் மோதியதில் சிவா இறந்தார் . மற்ற இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிராமத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கீழவளவு போலீசார் சமரசம் செய்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
