ADDED : ஜூலை 01, 2026 04:39 AM

மல்லசமுத்திரம்: சந்து கடையில் ஏற்பட்ட தகராறில், தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம், சத்யா நகரைச் சேர்ந்தவர் தனபால், 44. இவர், மனைவி கீதாவை அடித்து கொலை செய்த வழக்கில், ஐந்து மாதங்களுக்கு முன், ஜாமினில் வந்தார்.
நேற்று மாலை 6:00 மணிக்கு மல்லசமுத்திரம் டாஸ்மாக் கடை அருகே உள்ள சந்து கடைக்கு சென்ற தனபால், மது அருந்தினார். அப்போது, சந்து கடை நடத்தி வரும் நாகர்கோவில், அகஸ்திஸ்வரத்தைச் சேர்ந்த அஜித், 24, வீரமணி, 25, ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதன்பின், அங்கிருந்து மொபட்டில் வீடு திரும்பினார். பின்னால் தொடர்ந்து வந்த அஜித், வீரமணி இருவரும் தனபாலை வழிமறித்து, அரிவாளால் வெட்டினர். இதில், தனபால் உயிரிழந்தார்.
ஏ.டி.எஸ்.பி., அண்ணாதுரை, டி.எஸ்.பி., தங்கவேல், இன்ஸ்பெக்டர் சுதா ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மல்லசமுத்திரம் போலீசார், தலைமறைவான அஜித், வீரமணியை தேடுகின்றனர்.
