2.73 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசிபோட இலக்கு
2.73 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசிபோட இலக்கு
ADDED : ஜூலை 02, 2026 04:42 AM
மோகனுார்:'மாவட்டத்தில்,
2.73 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு
நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது' என, டி.ஆர்.ஓ., சரவணன் கூறினார்.
மோகனுார்
ஒன்றியம், அணியாபுரம் பஞ்.,ல், கால்நடை பராமரிப்புத்துறை
சார்பில், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், 9-வது சுற்று
கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது. டி.ஆர்.ஓ., சரவணன் தலைமை
வகித்து, முகாமை துவக்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், கால்நடைகளுக்கு, 9-வது சுற்று கோமாரி நோய்
தடுப்பூசிப்பணி, இன்று (நேற்று) துவங்கி, 45 நாட்கள் நடக்கிறது.
மேலும், கால்நடைகளுக்கு தடுப்பூசி பணி மேற்கொண்டு, உடனுக்குடன்,
'பாரத் பசுதான்' செயலியில் பதிவுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இப்பணிக்காக,
கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை
பராமரிப்பு உதவியாளர்கள் உள்ளடக்கிய, 110 தடுப்பூசி பணி குழுக்கள்
அமைக்கப்பட்டுள்ளன.
அக்குழுவினரால், அனைத்து கிராம பஞ்.,
டவுன் பஞ்., நகராட்சி பகுதிகளில் உள்ள பசுக்கள், எருதுகள், எருமைகள்
மற்றும் நான்கு மாதங்களுக்கு மேற்பட்ட கன்றுகளுக்கு, கோமாரி நோய்
தடுப்பூசி போடப்படுகிறது.
மாவட்டத்தில், 2 லட்சத்து, 73,400
கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இம்முகாமில், கால்நடை வளர்ப்போர், தங்கள்
கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டு பயன் பெறலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் (கூடுதல் பொறுப்பு) அருள்பிரகாஷ்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
