/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ராணுவ முகாமில் இயற்கை மீட்புக்கு முயற்சி! 1,000 சோலை மரக்கன்று நடவு பணி
/
ராணுவ முகாமில் இயற்கை மீட்புக்கு முயற்சி! 1,000 சோலை மரக்கன்று நடவு பணி
ராணுவ முகாமில் இயற்கை மீட்புக்கு முயற்சி! 1,000 சோலை மரக்கன்று நடவு பணி
ராணுவ முகாமில் இயற்கை மீட்புக்கு முயற்சி! 1,000 சோலை மரக்கன்று நடவு பணி
ADDED : நவ 17, 2025 05:12 AM

குன்னூர்: குன்னூர் ராணுவ முகாமில், இயற்கையை மீட்கும் முயற்சியாக, 1000 சோலை மரக்கன்று நடவு பணி நடந்து வருகிறது.
ஜப்பான் நாட்டில் 1970களில், இயற்கை தாவரங்கள் குறித்து, டாக்டர் அகிரா மியாவாகி என்பவரின் ஆய்வில், நாட்டின் காடுகளின் பெரும்பகுதி மனிதனால் உருவாக்கப்பட்டதாகவும், அதில் பூர்வீகமற்ற உயிரினங்கள் இருப்பதாகவும் தெரியவந்தது. இதன்படி, நகர் புறங்களில் அடர்த்தியான, காடுகளை உருவாக்கி பல்லுயிர்கள் பெருக மியாவாகி முறை கொண்டு வரப்பட்டது.
மீண்டும் கொண்டு வரலாம்
நகரமயமாக்கல், தொழில்துறை நடவடிக்கைகள் காரணமாக இழந்த பூர்வீக காடுகளை மீட்டெடுக்க மியாவாகி காடு முறை தீவிரம் காட்டப்பட்டது. இதனால், மறு காடு வளர்ப்பு மற்றும் காடு வளர்ப்புக்கான புதுமையான இந்த அணுகுமுறையில், இழந்த பூர்வீக காடுகள், இயற்கை வாழ்விடங்களை மீட்டெடுப்பதிலும், காலநிலை மாற்றத்தை எதிர்ப்பதிலும் அதன் செயல்திறனுக்காக உலகளாவிய அங்கீகாரத்தை பெற்றது.
அடர்த்தியான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட இந்த முறையில் அந்தந்த இடங்களில் உள்ள பூர்வீக மரங்களை நடுவதால், மனிதர்களால் ஏற்கனவே அழித்த இயற்கை வன சுற்றுச்சூழல் அமைப்புகளை மீண்டும் கொண்டு வர முடியும்.
குன்னூர் அருகே வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியத்தில், இயற்கையை மீட்கும் முயற்சியாக மியாவாகி காடு முறை திட்டம் துவங்கியது. சிறப்பு பெற்ற மியாவாகி முறையை, நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியத்தில் முதன்மை நிர்வாக அதிகாரி வினித் பாபாசாகிப் லோட்டே கொண்டு வந்துள்ளார்.
இந்த முறையில் மரக்கன்று நடவு திட்டம் நேற்று முன்தினம் கன்டோன்மென்ட் வாரியத்தில் துவங்கப்பட்டது.
1000 சோலை மரக்கன்று
முதல் மரக்கன்று நட்டு, துவக்கி வைத்த, மத்திய அரசின் கோதுமை ஆராய்ச்சி நிலைய தலைவரான முதன்மை விஞ்ஞானி டாக்டர் சிவசாமி பேசுகையில், ஜப்பானின் மியாவாகி முறையில், அந்தந்த இடத்திற்கே உரிய மரங்களை, ஒரே இடத்தில் அடர்த்தியான வகையில் நடவு செய்வதால், மண், நீர் வளத்திற்கு காரணமாக மாறும். இவற்றை தேடி வரும் பறவைகளுக்கான வாழ்விடமும் உணவு தேவையும் பூர்த்தி செய்யப்படுகிறது. அவற்றின் எச்சம் விதையாகி, மறு உற்பத்திக்கும் காரணமாகிறது, என்றார்.
சுகாதார ஆய்வாளர் பழனிசாமி கூறுகையில், இந்த முறையில், 7 ஏக்கர் பரப்பளவில் ஆயிரம் மரங்கள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இங்கு 400 மரங்கள் நடவு செய்யப்பட்டன., நாவல், செண்பகம், போடோகார்பஸ் உட்பட நீலகிரிக்கு உரிய மரங்கள் நடவு செய்யப்பட்டு வருகிறது, என்றார்.
வாரிய முன்னாள் துணை தலைவர் வினோத் குமார், தான் எழுதிய, 'வரிசை வரிசையாய் மரம் நடுவோம்' என்ற பாடலை பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசுகையில், காடுகள் அழிப்பால் மழை தற்போது குறைந்துவிட்டது. வாரியத்தில் மரம் வெட்ட பல சட்ட திட்டங்கள் உள்ளன. ஓசோன் படலத்தை காக்க மரங்கள் நடவு செய்வது அவசியம், என்றார்.
வாரிய நியமன உறுப்பினர் ஷீபா, முன்னாள் கவுன்சிலர் செபஸ்தியன் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து பேசினர்.
சின்ன வண்டிச்சோலை கன்டோன்மென்ட் பள்ளி மாணவ. மாணவியர் பங்கேற்றனர்

