/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காட்டில் விடப்பட்ட 'ரிவால்டோ' யானை மாயம்; 'ட்ரோன்' உதவியுடன் தேடும் வனத்துறையினர்
/
காட்டில் விடப்பட்ட 'ரிவால்டோ' யானை மாயம்; 'ட்ரோன்' உதவியுடன் தேடும் வனத்துறையினர்
காட்டில் விடப்பட்ட 'ரிவால்டோ' யானை மாயம்; 'ட்ரோன்' உதவியுடன் தேடும் வனத்துறையினர்
காட்டில் விடப்பட்ட 'ரிவால்டோ' யானை மாயம்; 'ட்ரோன்' உதவியுடன் தேடும் வனத்துறையினர்
UPDATED : டிச 09, 2025 08:06 AM
ADDED : டிச 09, 2025 07:25 AM

சென்னை: நீலகிரி மாவட்டம், கூடலுார் வனப்பகுதியில் விடப்பட்ட, 'ரிவால்டோ' என்ற காட்டு யானை மாயமானதால், 'ட்ரோன்' உதவியுடன், அதை தேடும் பணியில், வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம், மசினகுடி அருகில், வாழைத் தோட்டம் பகுதியில், ஒரு காட்டு யானை அடிக்கடி வந்து சென்றது. உள்ளூர் மக்கள், அந்த யானைக்கு 'ரிவால்டோ' எனப் பெயர் சூட்டினர்.
பொது மக்களின் அழுத்தம் காரணமாக, 'ரிவால்டோ' யானையை, வனத்துறையினர் பிடித்து, சில ஆண்டுகள் கண்காணிப்பில் வைத்து இருந்தனர். முதுமலை வனப்பகுதியில், 'ரேடியோ காலர்' பொருத்தி, ரிவால்டோ யானை, சில மாதங்களுக்கு முன் வனப்பகுதிக்குள் விடப்பட்டது.
அதன் நகர்வை, வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 40 நாட்களாக, ரிவால்டோ யானை, வனத்துறையின் கண்காணிப்பு எல்லைக்கு வெளியில் சென்றுவிட்டது. தற்போது அந்த யானை எங்குள்ளது என, வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து, 'ஓசை' என்ற சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் ஓசை காளிதாசன் கூறியதாவது:
பொதுவாக ஆண் யானைகள் ஊருக்குள் வந்தால், பிடிக்கப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்படும் போது, பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்படும் நிலையில், யானை இறந்து விடுவதும் உண்டு.
அதே போல், தொடர் கண்காணிப்பில், வனப்பகுதியில் விட்டாலும், சில ஆண் யானைகள், வனப்பகுதியில் நீண்ட தொலைவுக்கு சென்று விடுவது வழக்கம்.
அந்த வகையில், தற்போது ரிவால்டோ யானை, அடர்ந்த வனத்துக்குள் நீண்ட தொலைவுக்கு சென்றிருக்கலாம். தானாக வெளியில் வந்தால் மட்டுமே, அதன் இருப்பு தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து வனத்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 'ட்ரோன் போன்ற சாதனங்களை பயன்படுத்தி, யானையை தேடி வருகிறோம். கேரளா, கர்நாடகா வனப்பகுதிக்குள் சென்றிருக்கலாம். அங்கும் தேடி வருகிறோம்' என்றார்.

