சாக்கடை கால்வாயில் குடிநீர் குழாய் : நோய் பரவும் அபாயம்
சாக்கடை கால்வாயில் குடிநீர் குழாய் : நோய் பரவும் அபாயம்
ADDED : ஜூலை 02, 2026 04:40 PM
திருவாடானை: திருவாடானையில் சாக்கடை கால்வாயில் குடிநீர் குழாய் அமைந்துள்ளதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. திருவாடானை–ஓரியூர் செல்லும் ரோட்டில் தனியார் மருத்துவமனை எதிரில் மக்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சரியான இடத்தில் அமைக்காமல் சாக்கடை கால்வாய் மீது குழாய் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் எப்படி தண்ணீர் பிடிப்பது என்று தெரியாமல் உள்ளனர்.
குடிநீர் குழாயில் அடிப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டு சாக்கடையில் கலந்து வருகிறது. குழாயில் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்படும் நேரங்களில் அந்த உடைப்பு வழியாக சாக்கடை நீர் குழாய்க்கு உள்ளே உறிஞ்சப்படும் அபாயம் உள்ளது. மறுமுறை தண்ணீர் விடும் போது இந்த அசுத்த நீரை பயன்படுத்த நேரிடும். இந்த தண்ணீரை குடித்தால் தொற்று நோய்கள் பரவும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
