ADDED : ஜூலை 08, 2026 11:33 PM

திருவாடானை: திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு ரோட்டை சீரமைக்க கோரி காத்திருப்பு போராட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலகம் உட்பட 8 வது முறையாக போராட்டம் நடந்ததாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.
திருவாடானை அருகே குளத்துார் விலக்கு முதல் கீழஅரும்பூர் வழியாக செல்லும் திருவெற்றியூர் ரோடு, முகிழ்த்தகம், ஏசுபுரம் முதல் நம்புதாளை ரோடு சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள், முதியவர்கள் கடுமையாக பாதிக்கபட்டுள்ளனர்.
ரோட்டை சீரமைக்க கோரி நேற்று திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்தது.
இது குறித்து கீழஅரும்பூர் கிராம மக்கள் கூறியதாவது: திருவாடானை ஊராட்சி ஒன்றியம், தாலுகா அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகம் முன்பு வெவ்வேறு காலகட்டங்களில் 7 முறை பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம்.
ஆனால் அதிகாரிகள் தற்காலிக வாக்குறுதிகளை கூறுகிறார்களே தவிர ரோட்டை சீரமைப்பதற்கான எந்தவிதமான முயற்சியும் எடுக்கவில்லை. தற்போது திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு 8வது முறையாக காத்திருப்பு போராட்டத்தை நடத்துகிறோம் என்றனர். காலை 10:30 மணிக்கு துவங்கிய போராட்டம் மதியம் 2:00 மணி வரை நடந்தது.
தாசில்தார் ஆண்டி, பி.டி.ஓ. விஜி, இன்ஸ்பெக்டர் வாசிவம் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு மாதத்திற்குள் ரோடு சீரமைக்கபடும் என்று அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
போராட்டத்தில் மார்க்கிஸ்ட் கம்யூ., கட்சி சார்பில் குருவேல், முத்துராமு, சந்தானம், ஜெயகாந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
