தேக்கடி- குமுளி மெயின் ரோட்டில் மாடுகள் உலா வந்தால் அபராதம்: குமுளி ஊராட்சி எச்சரிக்கை
தேக்கடி- குமுளி மெயின் ரோட்டில் மாடுகள் உலா வந்தால் அபராதம்: குமுளி ஊராட்சி எச்சரிக்கை
UPDATED : ஜூலை 06, 2026 03:34 PM
ADDED : ஜூலை 06, 2026 03:30 PM
கூடலுார்:தேக்கடி குமுளி மெயின் ரோட்டில் பசு, மாடுகள் உலா வந்தால் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என குமுளி ஊராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
கேரள மாநிலம் குமுளி ஊராட்சியாக இருந்த போதிலும், முக்கிய சுற்றுலாத்தலமான தேக்கடி இருப்பதால் ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் இருக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. சீசன் மட்டுமின்றி தினந்தோறும் தேக்கடிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகம். மேலும் சபரிமலை சீசன் நேரங்களில் ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் அதிகமாக குமுளி வழியாக வரும்.
குமுளி, ரோசாப்பூக் கண்டம், தேக்கடி, பளியன்குடி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்படும் பசு, மாடுகளைவெளியில் மேய்ச்சலுக்காக அனுப்பி விடுகின்றனர். போக்குவரத்து அதிகம் உள்ள குமுளி, கோட்டயம் தேசிய நெடுஞ்சாலைகளிலும், தேக்கடி மூணாறு சாலையிலும் அதிகமாக உலா வருகின்றன. இதனால் அடிக்கடி விபத்துக்கள் நடந்த வண்ணம் உள்ளது.
மெயின் ரோட்டில் உலா வந்தால் ஒரு நாளுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் எனவும், ஒரு வாரத்திற்குள் வீட்டிற்கு பிடித்து செல்லாவிட்டால் ஊராட்சி சார்பில் அதனை பிடித்து ஏலம் விடப்படும் எனவும் ஊராட்சி நிர்வாகம் பசு மாடுகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
