/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முன்னாள் முதல்வர் காலனியில் எம்.எல்.ஏ.,வான மகன் பிரசாரம்
/
முன்னாள் முதல்வர் காலனியில் எம்.எல்.ஏ.,வான மகன் பிரசாரம்
முன்னாள் முதல்வர் காலனியில் எம்.எல்.ஏ.,வான மகன் பிரசாரம்
முன்னாள் முதல்வர் காலனியில் எம்.எல்.ஏ.,வான மகன் பிரசாரம்
ADDED : டிச 07, 2025 05:59 AM

மூணாறு: தந்தை உம்மன்சாண்டி பெயரிலான காலனியில் மகன் சாண்டிஉம்மன் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்தார்.
இடுக்கி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் முதல் கட்டமாக டிச.9ல் நடக்கிறது. அதற்கு அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். கேரளாவில் முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி பெயரில் உள்ள ஒரே ஒரு காலனியில் அவரது மகன் சாண்டிஉம்மன் எம்.எல்.ஏ. காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். இடுக்கி மாவட்டத்தில் உள்ள அந்த காலனி உருவாகியதற்கு பின்னால் ஒரு கதை உள்ளது.
இம்மாவட்டத்தில் கஞ்சிக்குழி ஊராட்சியில் உள்ள உம்மன்சாண்டி காலனியை, 1976க்கு முன்பு மழுவடி கிராமம் என அழைக்கப்பட்டது. அங்கு வசித்த 39 குடும்பங்களைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் நிலம் கோரி 1969ல் போராட்டத்தை துவக்கினர்.
அந்த போராட்டம் ஏழு ஆண்டுகள் நீடித்தது. மலைவாழ் மக்கள் நடத்திய போராட்டத்திற்கு அரசு மற்றும் அரசியல் ரீதியாக அன்றைய இளைஞர் காங்கிரஸ் பிரமுகரான உம்மன்சாண்டி பெரிதும் உதவினர். அதன் பலனாக 1976ல் 39 குடும்பங்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டன. அதன்பிறகு மழுவடி கிராமத்தின் பெயர் உம்மன்சாண்டி காலனியாக மாறியது.
தந்தை பெயரிலான காலனியில் மகன் புதுப்பள்ளி எம்.எல்.ஏ.யான சாண்டி உம்மன் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்தார்.

