போலீசார் இல்லாத ‘பிங்க்’ மகளிர் காவல் உதவி மையம் இரண்டே மாதத்தில் அவலம்
போலீசார் இல்லாத ‘பிங்க்’ மகளிர் காவல் உதவி மையம் இரண்டே மாதத்தில் அவலம்
ADDED : ஆக 04, 2026 08:00 PM

சென்னை, ஆக. 5–
பொன்னேரி அருகே, கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்ட, தமிழகத்தின் முதல் ‘பிங்க்’ நிற மகளிர் காவல் உதவி மையத்தில், போலீசார் இல்லாததால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் வெளியே, ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட, ‘பிங்க்’ நிற பொன்னேரி மகளிர் காவல் உதவி மையம், கடந்த ஜூன் 11ம் தேதி திறக்கப்பட்டது.
குழந்தைகள் மற்றும் பெண்கள் எளிதாக காவல் துறையை அணுகி புகார் அளிக்க வசதியாக, இந்த மையம் அமைக்கப்பட்டது.
அதேபோல், மையத்திற்குள் 12 ‘சி.சி.டி.வி’ எனும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, தொடர்ந்து போலீசார் காண்காணிப்பு பணியில் ஈடுபடுவர் எனவும், சுழற்சி முறையில் போலீசார் பணியில் இருப்பர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், திறக்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குள், உதவி மையத்தில் போலீசாரே இருப்பதில்லை என, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மையத்திற்குள் இருக்கும், ‘சி.சி.டி.வி’ கேமராக்கள் மட்டும் எப்போதும் செயல்பாட்டில் இருந்தாலும், அதை கண்காணிக்கவும், அங்கு வரும் மக்களுக்கு உதவவும் போலீசார் யாரும் இல்லாததால், அங்கு வருவோர் அவதி அடைந்து வருகின்றனர்.
அதேபோல், இந்த காவல் உதவி மையம் திறக்கப்பட்ட பின் தான், அப்பகுதியில் திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
