திருவள்ளூரை பசுமையாக மாற்ற 64,000 மரக்கன்றுகள் நட இலக்கு
திருவள்ளூரை பசுமையாக மாற்ற 64,000 மரக்கன்றுகள் நட இலக்கு
ADDED : ஜூலை 07, 2026 06:22 AM

திருவள்ளூர்: திருவள்ளூர் நகரை பசுமையாக மாற்றுவதற்காக, 64,000 மரக்கன்றுகள் நட, நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
திருவள்ளூர் நகராட்சியில், 27 வார்டுகளில், 450க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. புதிதாக உருவாகி வரும் குடியிருப்பு பகுதிகளிலும், மேலும் பல புதிய தெருக்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழக அரசின் உத்தரவின்படி, திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில், மரக்கன்றுகள் நட்டு, பசுமை நகராட்சியாக மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்காக, நகராட்சிக்கு உட்பட்ட குமணன் தெரு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில், 4 லட்சம் ரூபாய் மதிப்பில், 'நர்சரி கார்டன்' அமைக்கும் பணி நடந்து வருகிறது.
நகராட்சி கமிஷனர் தாமோதரன் கூறியதாவது:
திருவள்ளூர் நகராட்சியை பசுமையாக மாற்றும் வகையில், அனைத்து தெருக்கள், குளங்கள், பூங்கா உள்ளிட்ட இடங்களில், 64,000 மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஜூனில் தொடங்கி, இதுவரை 700 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
நகராட்சிக்கு தேவையான மரக்கன்றுகளை வளர்ப்பதற்காக, குமணன் தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில், 'நர்சரி கார்டன்' அமைக்கும் பணி நடந்து வருகிறது.
அங்கு, 2,500 மரக்கன்றுகள் பெறப்பட்டு, வளர்க்கப்பட உள்ளன. இதற்காக, இரண்டு தோட்டக் காவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
நர்சரி கார்டனில் உள்ள கன்றுகள், 5 அடி வளர்ந்ததும், நகராட்சி பகுதிகளில் நடப்படும். மேலும், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் வாயிலாக, நுங்கம்பாக்கம் உரக்கிடங்கு, முகமது அலி தெரு அருகில் உள்ள குளம், கற்குழாய் சாலை உள்ளிட்ட பகுதிகளில், முதல் கட்டமாக மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.
திருவள்ளூர் நகரை பசுமை நகராட்சியாக மாற்ற, தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களும் பங்கேற்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
