ADDED : ஜூலை 03, 2026 04:52 PM
உடுமலை: அரசு ஐ.டி.ஐ., ல் படித்த மாணவர்கள், 270 பேருக்கு, வேலையில் சேர்வதற்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
திருப்பூர் – தாராபுரம் ரோட்டிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., பாலமுருகன் முன்னிலை வகித்தார்.
தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்த, 270 மாணவர்களுக்கு, எலக்ட்ரிக் வாகன உற்பத்தி, கட்டுமானம் சார்ந்த பல்வேறு நிறுவனங்களில் பணியில் சேர்வதற்கான நியமன ஆணை வழங்கப்பட்டது.
பணி நியமன ஆணை வழங்கி கலெக்டர் பேசியதாவது:
மாணவர்கள், ஐ.டி.ஐ. படிப்பை முதல்படியாக கொண்டு, பொறியியல் அல்லது டிப்ளமோ படிப்புகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்ந்து, உயர் கல்வியை தொடரவேண்டும். வாகன உற்பத்தியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.
ஆகவே, ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. தகவல் தொழில்நுட்ப துறையில், ஏ.ஐ. காரணமாக சில வேலைகள் மாறினாலும், உற்பத்தி துறையில், இயந்திரங்களை இயக்கவும், பராமரிக்கவும், திறமையான மனிதர்களின் தேவை எப்போதும் இருக்கும். எந்த துறையை தேர்வு செய்தாலும், அதில் முழுமையான நிபுணத்துவம் பெறவேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
திருப்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் பிரபு, பயிற்சி அலுவலர் குளோரி ரத்தின குமாரி உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
