/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமராவதி அணையிலிருந்து உயிர் தண்ணீர் திறப்பு; வழக்கமான பாசனத்திற்கு வழங்க வலியுறுத்தல்
/
அமராவதி அணையிலிருந்து உயிர் தண்ணீர் திறப்பு; வழக்கமான பாசனத்திற்கு வழங்க வலியுறுத்தல்
அமராவதி அணையிலிருந்து உயிர் தண்ணீர் திறப்பு; வழக்கமான பாசனத்திற்கு வழங்க வலியுறுத்தல்
அமராவதி அணையிலிருந்து உயிர் தண்ணீர் திறப்பு; வழக்கமான பாசனத்திற்கு வழங்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 25, 2024 10:37 PM

உடுமலை : அமராவதி அணை நிரம்பியுள்ள நிலையில், பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு வழக்கமான முறையில் நீர் திறக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையிலிருந்து, கடந்த ஜூன், 24 முதல், பழைய ஆயக்கட்டு, எட்டு ராஜவாய்க்கால் பாசன நிலங்களில் குறுவை நெல் சாகுபடிக்காக நீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக, கடந்த, 18ம் தேதி அணை நிரம்பியது; கடந்த ஒரு வாரமாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அமராவதி பழைய ஆயக்கட்டு, அலங்கியம் முதல் கரூர் வரையிலான, 10 வலது கரை கால்வாய்கள் வழியாக பாசன வசதி பெற்று வரும், 21,867 ஏக்கர் நிலங்களுக்கு, நீர் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இன்று முதல், வரும், ஆக., 8 வரை, 15 நாட்களுக்கு, ஆற்று மதகு வழியாக, வினாடிக்கு, ஆயிரம் கனஅடி நீர் வீதம், மொத்தம், 1,296 மில்லியன் கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
அதே போல், புதிய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள, 25,250 ஏக்கர் நிலங்களுக்கு, இன்று முதல், ஆக., 8 வரை, 15 நாட்களுக்கு, பிரதான கால்வாயில், வினாடிக்கு, 440 கனஅடி வீதம், 570.24 மில்லியன் கனஅடி நீர் திறக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இப்பாசன பகுதிகளில், நிலையிலுள்ள பயிர்களை காப்பாற்றும் வகையிலும், சிறப்பு நனைப்பு மற்றும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டும் திறக்கப்படுவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, அணை நிரம்பியுள்ள நிலையில், உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 15 நாட்கள் நீர் வழங்குவதை தொடர்ந்து, சாகுபடியை துவக்கும் வகையில், வழக்கமான நடைமுறையில் நீர் வழங்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில்,' அணை நீர் இருப்பு குறைவாக இருந்த போது, 15 நாட்கள் உயிர்த்தண்ணீர் வழங்க கோரிக்கை விடப்பட்டது. தற்போது, அணை நிரம்பி, திருப்தியான நீர் இருப்பு உள்ளது.
எனவே, நெல், கரும்பு, மக்காச்சோளம் என பயிர் சாகுபடி மேற்கொள்ளும் வகையில், உரிய கால நிர்ணயம் செய்து வழங்கும் வகையில், பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளில், வழக்கமான பயிர் சாகுபடி மேற்கொள்ள, தொடந்து நீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
அதிகாரிகளிடம் கேட்ட போது, 'தற்போது அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. 89 அடிக்கு கீழ் நீர்மட்டம் குறைந்ததும், அரசு உத்தரவு அடிப்படையில், சிறப்பு நனைப்புக்கு நீர் தொடர்ந்து வழங்கப்படும். ஆக., 8க்கு பின், இடைவெளி விட்டு, பாசனத்திற்கு நீர் வழங்க அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்படும்,' என்றனர்.
அணை நீர்மட்டம்
நேற்று காலை நிலவரப்படி, அமராவதி அணையில் மொத்தமுள்ள, 90 அடியில், 89.11 அடி நீர்மட்டமும், மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கனஅடியில், 3,966.32 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 1,435 கனஅடியாகவும், வெளியேற்றம், 1,215 கனஅடியாகவும் இருந்தது.

