UPDATED : ஜூலை 02, 2026 11:39 PM
ADDED : ஜூலை 02, 2026 07:51 PM
திருப்பூர்:சங்கிலிப் பள்ளம் ஓடையில் நீண்ட காலமாக பாதாள சாக்கடை கழிவு நீர் சென்று கலக்கிறது. குழாய் சேதம் சரி செய்யப்படாமல், இந்த அவலநிலை நீடிக்கிறது.
திருப்பூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதல் திட்டத்தில் சேகரமாகும் கழிவுநீர் பிதான குழாய்கள் வழியாக சேகரித்து, எஸ்.பெரியபாளையம் பகுதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக, குடியிருப்பு பகுதிகளில் பிரதான குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அவ்வகையில், ஷெரீப் காலனி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குழாய், அரண்மனைப் புதுார் பகுதியில் சங்கிலிப் பள்ளம் ஓடையைக் கடந்து செல்கிறது. இந்த குழாய் உடைந்துள்ளதால், கழிவு நீர் குழாயில் தொடர்ந்து செல்லாமல் ஓடை நீரில் கலக்கிறது. இந்நிலை பல ஆண்டுகளாக உள்ளது. ஓடையில் நீர் வரத்து அதிகமானால், சேதம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும்.
