ADDED : ஆக 28, 2026 08:44 PM
திருப்பூர், ஆக. 29-–
‘‘வீடுகளில் உருவாகும் குப்பையை தரம் பிரித்து வழங்குவது ஒவ்வொருவரும் இயற்கைக்கு செய்யும் சேவையாகும்; பொதுமக்களின் பங்களிப்பு இருந்தால் மட்டுமே திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முழுமையாக வெற்றிபெறச் செய்ய முடியும்’’ என, உதயம் பவுண்டேஷன் தெரிவித்துள்ளது.
உதயம் பவுண்டேஷன் சார்பில் நொய்யல் ஆறு புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆற்றில் குப்பை கொட்டுவதை தடுக்கும் வகையில் கம்பிவேலி அமைக்கப்பட்டுள்ளதுடன், திடக்கழிவு மேலாண்மை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வீடுகளில் உருவாகும் குப்பையை பிரித்து வழங்குவது குறித்து குழுவினர் வீடு வீடாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நொய்யல் புனரமைப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வாணி ஈஸ்வரி, துறை அலுவலர்களுடன் நேரில் பார்வையிட்டார். உதயம் பவுண்டேஷன் குழுவினர், நொய்யல் ஆற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் குப்பை மேலாண்மை நடவடிக்கைகள் குறித்து விளக்கினர்.
இதையடுத்து, அக்ரஹாரப்புத்துார் பத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தில் பொதுமக்களுடனான கலந்துரையாடல் நடந்தது. பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் வரவேற்றார். தலைவர் ரகுபதி பேசியதாவது:
மக்கும் குப்பை, மக்காத குப்பை என வீடுகளிலேயே பிரித்து வழங்குவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அக்ரஹாரப்புத்துார், சின்னப்புத்துார் கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக குப்பை சேகரிப்பு தொட்டிகள் வழங்க திட்டமிட்டுள்ளோம். அடுத்தகட்டமாக, இந்த திட்டம் மங்கலம் பகுதிக்கும் விரிவுபடுத்தப்படும்.
ஒவ்வொரு வீட்டிலும் குப்பையை தரம் பிரித்து வழங்குவதே ஒரு சேவைதான். குப்பையை முறையாக பிரித்து வழங்கினால், திடக்கழிவு மேலாண்மை பணி எளிதாகும். அதன்மூலம் இயற்கையை பாதுகாக்கவும் முடியும். இதற்கு ஒவ்வொருவரின் பங்களிப்பும் அவசியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
அலுவலர்கள், புதிய திடக்கழிவு மேலாண்மை விதிகள் மற்றும் குப்பையை நான்கு வகையாக பிரித்து வழங்கும் முறை குறித்து விளக்கினர்
துறை அலுவலர்கள், புதிய திடக்கழிவு மேலாண்மை விதிகள் மற்றும் வீடுகளில் குப்பையை நான்கு வகைகளாக பிரித்து, துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைக்கும் முறை குறித்து பொதுமக்களுக்கு விளக்கினர்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் இந்துமதி, உதவி திட்ட அலுவலர் சரவணன், பி.டி.ஓ.,க்கள் சரவணன், கோகிலா, உதவி செயற்பொறியாளர்கள் துரைசாமி, தங்கமணி, வட்டாரப் பொறியாளர் கார்த்திக்குமார் மற்றும் அக்ரஹாரப்புத்துார், சின்னப்புத்துார் பகுதி மக்கள் பங்கேற்றனர்.
–––
குப்பைகளைத் தரம் பிரித்து வாங்குவது குறித்து பொதுமக்கள் சந்திப்புக் கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வாணி ஈஸ்வரி பேசினார். அருகில், செயற்பொறியாளர் இந்துமதி, உதயம் பவுண்டேஷன் தலைவர் ரகுபதி உள்ளிட்ட அதிகாரிகள்.
