பாக்கு மரங்கள் பராமரிப்புக்கு ஆர்வம்: கூடுதல் வருவாய்க்கு திட்டம்
பாக்கு மரங்கள் பராமரிப்புக்கு ஆர்வம்: கூடுதல் வருவாய்க்கு திட்டம்
UPDATED : ஜூலை 05, 2026 03:38 PM
ADDED : ஜூலை 05, 2026 02:40 PM
உடுமலை: தென்னந்தோப்பில், ஊடுபயிராகவும், தனிப்பயிராகவும், பாக்கு மரங்களை நடவு செய்து வளர்க்க, உடுமலை விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
உடுமலை சுற்றுப்பகுதியில், பிரதானமாக உள்ள தென்னை சாகுபடியில், ஊடுபயிராக பாக்கு மரங்கள் பராமரிக்கப்பட்டு வந்தது.
குறிப்பாக, தளி, தேவனுார்புதுார், ஆண்டியூர், நல்லாறு காலனி, மயிலாடும்பாறை உட்பட நீர் வளம் அதிகமுள்ள பகுதிகளில், பாக்கு மரங்கள் அதிகளவு நடவு செய்து, விவசாயிகள் பராமரித்து வந்தனர்.
இந்நிலையில், தமிழக அரசு, பிளாஸ்டிக் கேரிபேக், டம்ளர், தட்டு உள்ளிட்ட பொருட்களுக்கு தடை விதித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன், உத்தரவிட்டது. எனவே, மாற்று பயன்பாடாக, பாக்கு மட்டை தட்டு, டம்ளர் உள்ளிட்ட பொருட்கள் தேவை அதிகரித்துள்ளது.
பாக்கு மரங்களில் இருந்து பெறப்படும் மட்டையின் விலையும் பல மடங்கு உயர்ந்தது. இவ்வகை பாக்கு மட்டை, கர்நாடகா மாநிலத்தில், இருந்து பெறப்பட்டு, தமிழகத்தில், மதிப்பு கூட்டி விற்பனை செய்யப்படுகிறது.
பிற மாநிலங்களில், இருந்து மூலப்பொருள் பெறப்படுவதால், போக்குவரத்து செலவு அதிகரிப்பு, தட்டுப்பாடு ஏற்பட்டு, உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இப்பிரச்னைக்கு தீர்வாக, இப்பகுதியிலேயே மூலப்பொருள் கிடைத்தால், பயனுள்ளதாக இருக்கும் என உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
எனவே, பாக்கு மரங்களை தனிப்பயிராக சாகுபடி செய்து, பராமரிக்க விவசாயிகளிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. அவ்வகையில், ஏழு குள பாசன திட்ட பகுதிகளில், பாக்கு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் கூறுகையில், 'பாக்கு மரக்கன்றுகளை நட்டால், பராமரிப்பை பொருத்து, மரங்கள், 20 முதல், 50 ஆண்டுகள் வரை பலன் கொடுக்கிறது. ஆண்டுக்கு, ஆறு முறை காய்கள் வெட்டலாம். பாக்கு மட்டைகளை சேகரித்து, காய வைத்து பதப்படுத்தி விற்கலாம், பாக்கு மட்டை தேவை அதிகரிப்பு காரணமாக, விலை உயர்ந்து கொண்டே வருகிறது,' என்றனர்.
உடுமலை பகுதியில், பராமரிக்கப்படும் பாக்கு மரங்களில் அறுவடை துவங்கியுள்ளது; விற்பனைக்காக உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு பாக்கு கொண்டு வரப்பட்டு, உலர்களங்களில் காய வைக்கப்படுகிறது.
