/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
அண்ணாமலையார் மலையில் நாளை கார்த்திகை மஹா தீபம்
/
அண்ணாமலையார் மலையில் நாளை கார்த்திகை மஹா தீபம்
ADDED : டிச 02, 2025 07:22 AM

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை, 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில், மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த, 24ல் தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாளை, 3ம் தேதி, முக்கிய விழாவான பஞ்ச பூதங்கள், 'ஏகன் - அனேகன்' என்பதை விளக்கும் வகையில், அதிகாலை, 4:00 மணிக்கு, சுவாமி கருவறை எதிரில் பரணி தீபமும், 'அனேகன் - ஏகன்' என்பதை விளக்கும் வகையில், மாலை, 6:00 மணிக்கு, 2,668, அடி உயர மலை உச்சியில், மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளன.
மஹா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரை இன்று, மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
மேலும் மஹா தீபம் ஏற்ற, 4,500 கிலோ நெய் மற்றும், 1,150 மீட்டர் காடா துணியால் ஆன திரி தயார் செய்யப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
விழாவை முன்னிட்டு, சுவாமி சன்னிதி முழுதும், பல்வேறு வண்ணங்களில், ரோஜா, சாமந்தி, பூக்களால் தோரணங்கள் கட்டி, அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், கோவில் வளாகம் முழுதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக உள்ளது.
கோவில் வளாக கலையரங்கில் சமய சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள், ஆன்மிக பாடல்கள் ஒலித்தவாறு, விழா களை கட்டியுள்ளது.

