ஸ்கூட்டரில் சென்றவரிடம் நகை பறிப்பு:10 பேர் மீது வழக்கு
ஸ்கூட்டரில் சென்றவரிடம் நகை பறிப்பு:10 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 03, 2026 03:50 PM
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே ஸ்கூட்டரில் சென்றவரை தாக்கி ஒன்றரை சவரன் நகையை அபகரித்ததாக 10 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விக்கிரவாண்டி, வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் இருதயநாதன், 65; இவர், கடந்த மாதம் 13ம் தேதி மாலை 6:30 மணிக்கு தனது ஸ்கூட்டரில் கீழக்கொந்தை அருகே உள்ள சர்வீஸ் சாலை வழியாக விக்கிரவாண்டி நோக்கி வந்தார்.
பைக்குகளில் பின் தொடர்ந்த கீழக்கொந்தையைச் சேர்ந்த வீரமுத்து மகன் அஷ்வின், 22; பழனிசாமி மகன் நிகேஷ், 24; உட்பட 10 பேர் கொண்ட கும்பல் ஸ்கூட்டர் மீது மோதியதில் இருதயநாதன் கீழே விழுந்தார்.
இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு இருதயநாதனை தாக்கினர். தாக்கிய 10 பேரும் சென்றதும் இருதயநாதன் பார்த்தபோது அவர் அணிந்திருந்த ஒன்றரை சவரன் ஜெயின் மற்றும் மோதிரம் காணாமல் போனது தெரிய வந்தது.
இதுகுறித்து நேற்று இருதயநாதன் அளித்த புகாரின் பேரில், அஷ்வின், நிகேஷ் உட்பட 10 பேர் மீது விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
