/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசியல் சார்ந்த விளம்பரங்களை அகற்ற 48 மணி நேரம்... கெடு; கண்காணிப்பில் ஈடுபட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
/
அரசியல் சார்ந்த விளம்பரங்களை அகற்ற 48 மணி நேரம்... கெடு; கண்காணிப்பில் ஈடுபட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
அரசியல் சார்ந்த விளம்பரங்களை அகற்ற 48 மணி நேரம்... கெடு; கண்காணிப்பில் ஈடுபட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
அரசியல் சார்ந்த விளம்பரங்களை அகற்ற 48 மணி நேரம்... கெடு; கண்காணிப்பில் ஈடுபட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
ADDED : மார் 18, 2024 03:27 AM

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகளை பின்பற்றவும், அரசு, தனியார் சுவர்கள் மற்றும் அரசு இணையத்தில் உள்ள அரசியல் சார்ந்த விளம்பரங்களை 48 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும் என, மாவட்ட தேர்தல் அதிகாரி, அரசு துறை அலுவலர்களுக்கு உத்தவிட்டுள்ளார்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் பின்பற்றுவது, அதனை கண்காணிப்பது தொடர்பாகவும், அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.
கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பழனி தலைமை தாங்கி பேசியதாவது:
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டது.
தேர்தல் சுமூகமாக நடத்தவும், அனைத்து கட்சிகளையும் சமமாக பாவிக்கவும் இந்த நடைமுறை உறுதி செய்கிறது. அதனடிப்படையில் தேர்தல் நடத்தை விதிமுறை அமல்படுத்தப்பட்டது முதல், எந்த ஒரு அரசு அலுவலகங்களிலும் அரசியல் சார்ந்த படங்கள், காலண்டர்கள், நலத்திட்ட ஸ்டிக்கர்கள், பிரதமர், முதல்வர், அமைச்சர்களின் படங்கள் வைத்திருக்கக் கூடாது. உடனடியாக அவற்றினை அகற்றிட வேண்டும்.
அரசியல் கட்சி சார்ந்த இறந்த தலைவர்களின் சிலையை மறைக்க வேண்டியதில்லை. ஆனால், சிலை பகுதியில் உள்ள கட்சியின் சின்னங்கள், கல்வெட்டுகள் கட்டாயம் அகற்ற வேண்டும். இறந்த தேசிய தலைவர்கள், கவிஞர்கள், ஜனாதிபதி மற்றும் கவர்னர் புகைப்படம் அலுவலகங்களில் வைத்துக்கொள்ள தடையில்லை.
தேர்தல் தொடர்பான அரசியல் கட்சிகளின் ஊர்வலங்களில், தேசிய கொடிகள் பயன்படுத்தாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும். துறை சார்ந்த நலத்திட்ட விழாக்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
சிறப்பு மருத்துவ சிகிச்சைகளின் போது விளம்பர பதாகைகள் வைக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அரசுக்கு சொந்தமான இடங்களில் சுவர் எழுத்துக்கள், சுவரொட்டிகள், விளம்பர பலகைகள், பதாகைகள், கொடிகள் போன்றவை 24 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும்.
ரயில் நிலையம், பஸ் நிலையங்கள், பாலங்கள், சாலைகள், அரசு பஸ்கள், நகராட்சி, ஊராட்சி கட்டடங்கள் போன்ற பொது இடங்களில் சுவர் எழுத்து, சுவரொட்டிகள், விளம்பர பலகைகள், பதாகைகள், கொடிகள், அரசியல் விளம்பரங்கள் 48 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும்.
அரசு அலுவலக வலைதளத்தில் அரசியல் சார்ந்த பொறுப்பாளர்களின் புகைப்படம், அமைச்சர்கள், அரசியல்வாதிகள் பற்றி, மத்திய, மாநில அரசுகளின் அலுவலக வலைதளத்தில் உள்ள குறிப்புகள் நீக்கப்பட வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பழனி பேசினார்.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ.,க்கள் பரமேஸ்வரி, சரஸ்வதி, மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா, கலெக்டர் நேர்முக உதவியாளர் (தேர்தல்) தமிழரசன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

