நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவதில் தாமதம்
நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவதில் தாமதம்
ADDED : ஜூன் 30, 2026 11:50 PM

சிவகாசி: அரசு கையகப்படுத்திய நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்குவதில் தாமதமாகி வருவதால் திருத்தங்கல் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி பிப். 17ல் துவங்கிய நிலையில் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
சிவகாசி சாட்சியாபுரம், திருத்தங்கல் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கும் பணிக்கு 2024 ல் பிரதமர் மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
முதற்கட்டமாக சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங்கில் ரூ.62 கோடியில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம் 2025 நவ. 11 ல் பயன்பாட்டிற்கு வந்தது. இதையடுத்து திருத்தங்கல் ரயில்வே கிராசிங்கில் 804 மீட்டர் நீளம், 8.5 மீட்டர் அகலத்தில் மேம்பாலம் அமைக்க திட்ட அறிக்கை தாயார் செய்யப்பட்டது.
இத்திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த ரூ.32 கோடியும், மேம்பால கட்டுமான பணிக்கு ரூ.45.6 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஜன.18ல் மேம்பால கட்டுமான பணியை பூமி பூஜை செய்து துவக்கி வைக்கப்பட்டது. ஆனால் நில எடுப்பு பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில் பாலம் கட்டும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் நில உரிமையாளர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. பணம் வழங்கப்பட்ட பின்னர், இடம், கட்டடங் களின் உரிமையாளர்களுக்கு தாங்களாகவே கடை அல்லது வீடு உள்ளிட்ட கட்டடங்களை அகற்றுவதற்கு இருமுறை நோட்டீஸ் அனுப்பப்படும்.
அதன் பின்னரும் அகற்றப்படவில்லை என்றால் அரசு சார்பில் கட்டடங்கள் அகற்றப்படும்.
இதன் பின்னரே பாலம் அமைக்கும் பணி துவங்க வாய்ப்பு இருந்த நிலையில் ரயில்வே கேட்டில் இருந்து சிவகாசி ரோட்டில் உள்ள கட்டடங்கள் இடிக்கப்பட்டு பிப். 17ல் பில்லர் அமைக்கும் பணி துவங்கியது. ஆனால் அடுத்த கட்டப் பணிகள் நடைபெறவில்லை.
ஏனெனில் நிலம், கட்டடங்கள் கையகப் படுத்தப்பட்ட நிலையில் உரிமையாளர்களுக்கு இதுவரையிலும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. மேலும் நிலம் கையகப்படுத்தப்பட்ட இடங்களில் உள்ள கட்டடங்கள் அகற்றப்படவும் இல்லை.
இதனால் மேம்பாலம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே விரைவில் பணிகளை துவக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இடம் கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
விரைவில் உரிய பணம் வழங்கப்பட உள்ளது. தற்போது ரயில்வே கேட்டில் இருந்து சிவகாசி செல்லும் ரோட்டில் இருந்த கட்டடங்கள் அகற்றப்பட்டுள்ளன.
இப்பகுதியில் நான்கு பில்லர்கள் அமைக்கப்பட உள்ள நிலையில் அடுத்தடுத்த பணிகள் துவங்கும், என்றனர்.
