ரூ.1 கோடி கேட்டு ஆர்.எஸ்.பாரதி மீது அண்ணாமலை மானநஷ்ட வழக்கு
ரூ.1 கோடி கேட்டு ஆர்.எஸ்.பாரதி மீது அண்ணாமலை மானநஷ்ட வழக்கு
ADDED : ஜூலை 11, 2024 02:43 AM
சென்னை:'கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய பலிகளுக்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தான் காரணம்' என கூறிய, தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி மீது, மானநஷ்ட வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை, சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில், 18வது நீதிமன்ற மாஜிஸ்திரேட் பார்த்திபனிடம், இந்த வழக்கை, நேற்று அண்ணாமலை தாக்கல் செய்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
நான் அரசியலுக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. எவ்வளவோ என்னைப் பற்றி பொய் பிரசாரம் பரப்பி உள்ளனர்; அவதுாறாகப் பேசி உள்ளனர். ஆனால், ஒருவர் மீதுகூட நான் அவதுாறு வழக்கு தொடரவில்லை.
ஆனால், ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு எனக்கு மிகுந்த துக்கத்தை தந்துள்ளது. அவர், 80 வயதைக் கடந்தவர். 60 ஆண்டு காலம் அரசியலில் இருப்பவர். தி.மு.க.,வின் அழிவுக்காலம் துவங்கி விட்டதால், அவர் என்மீது அவதுாறு பரப்பி உள்ளார்.
அவர் எனக்கு, 1 கோடி ரூபாய் தர வேண்டும் எனக் கேட்டு, அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளேன்.
அந்த 1 கோடி ரூபாயில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்க மையம் ஏற்படுத்தலாம் என திட்டமிட்டுள்ளேன். அதற்காக, இந்த வழக்கை கம்பீரத்துடன் நடத்த உள்ளேன். தி.மு.க.,வும், ஆர்.எஸ்.பாரதியும் இந்த வழக்கில் இருந்து தப்பிக்க முடியாது.
சி.பி.ஐ., என்றதும் பதற்றம்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என எல்லா தரப்பில் இருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டு விட்டது. ஆனாலும், அதை ஏற்க தமிழக அரசு மறுக்கிறது.
அதற்கு வலுவான காரணம் இருக்கிறது. சி.பி.ஐ., விசாரணைக்கு வந்தால், டாஸ்மாக் வருமானம், மது பாட்டில்கள் கொள்முதல் செய்யும் தொழிற்சாலைகள் யாருடையவை; அதன் பின்னணியில் இருக்கும் அரசியல் முக்கியப் புள்ளிகள் குறித்தெல்லாம் விசாரிப்பர். அதனால் தான், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.,வினர், சி.பி.ஐ., விசாரணை என்றதுமே பதற்றப்படுகின்றனர்.
தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, எங்கள் கட்சியில் ரவுடிகள் இருப்பதாக பட்டியலிட்டார். அவருக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன். அதன் அடிப்படையிலேயே, அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து ஆதாரப்பூர்வமாக தெரிவித்தேன். அவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி வெளியே வந்தவர்.
அவர் மீதான வழக்குப்பட்டியல் மற்றும் அவர் எப்படிப்பட்டவர் என்பது குறித்து நான் வெளிப்படையாக சொன்னதற்கு, என் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக தெரிவித்துள்ளார்.
லண்டனில் சொத்து
அப்படியொரு வழக்கை சந்திக்க தயாராக உள்ளேன். ரிசர்வ் வங்கியில் கடைநிலை ஊழியராக இருந்த செல்வப்பெருந்தகை, லண்டனில் மனைவி பெயரில் சொத்து வாங்கும் அளவுக்கு வளர்ந்த விதம் பற்றி அம்பலப்படுத்துவேன். அவர், 'பசு தோல் போர்த்திய புலி' என்பதை, தமிழக மக்கள் முன் நிரூபிப்பேன்.
இந்தியாவில், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்த ஒருவர் மாநில காங்., தலைவராக இருப்பது தமிழகத்தில் மட்டும் தான்.
ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு எப்படிப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.
அந்த வழக்கிற்காக செல்வப்பெருந்தகையை கைது செய்ய முயன்றபோது, அவர் தப்பியோட முயற்சித்தபோது, சுவர் ஏறி குதித்ததில் கால் உடைந்தது.
ஆனால், நான் காந்தி வழி வந்தவன், நான் நல்லவன் எனச் சொல்கிறார். அதனால் தான், அவர் மீதான அனைத்து வழக்குகள் குறித்த பட்டியலும் வெளியிடப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில்தான் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தார் ஜெயலலிதா.
மறைந்த கருணாநிதியின் நினைவு நாணயம் வெளியிட, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தின் நலன், வளர்ச்சி என, எதற்குமே மத்திய அரசு தடை போட்டது இல்லை. ஆனால், தி.மு.க.,வினர் எல்லாம் பெற்றுக் கொண்டு, மத்திய அரசு ஒன்றுமே செய்யவில்லை என, பிரசாரம் செய்வர்.
இவ்வாறு கூறினார்.

