மேட்டூர் அணையை முன்கூட்டியே திறக்க முதல்வருக்கு விவசாயிகள் கடிதம்
மேட்டூர் அணையை முன்கூட்டியே திறக்க முதல்வருக்கு விவசாயிகள் கடிதம்
ADDED : ஜூலை 26, 2024 08:03 PM
சென்னை:'மேட்டூர் அணையில் முன்கூட்டியே நீரை திறந்து விட வேண்டும்' என, காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன், முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதனால், ஒரு லட்சம் கன அடிக்கும் கூடுதலான நீரை வெளியேற்ற, அம்மாநில பொதுப்பணித் துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இப்படி தொடர்ச்சியாக அதிக அளவிலான நீர், கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் போது, தமிழகத்தின் மேட்டூர் அணை, ஒரு சில நாட்களிலேயே முழு கொள்ளளவை எட்டிவிடும்.
மேட்டூர் அணை முழுதுமாக நிரம்பிய பின், ஒட்டுமொத்த நீரையும், கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிட்டு, அது கடலுக்குச் சென்று வீணாகக் கலப்பதை தடுக்க வேண்டும்.
அதற்காக முன்கூட்டியே திட்டமிட்டு, மேட்டூர் அணையில் இருந்து, வினாடிக்கு 25,000 கனஅடி நீரை திறந்து விட வேண்டும்.
அப்படி செய்யும் போது, டெல்டா மாவட்டங்களில் இருக்கும் சிறு ஏரி, குளங்கள் நிரம்பும்; அந்தப் பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான ஆடிப்பெருக்கு நாளை, இந்த ஆண்டாவது காவிரியில் தண்ணீரோடு கொண்டாடுவதற்கும் ஏதுவாக இருக்கும்.
விவசாயிகளும் பெருமகிழ்ச்சி அடைவர். முன்கூட்டியே மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பதால், காவிரி பாசன கடைமடை பகுதிகளுக்கும் இம்முறை தண்ணீர் சென்று சேரும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

