சீர்மரபு பழங்குடியினர் சான்றிதழ் உடனே வழங்கவும்: அண்ணாமலை
சீர்மரபு பழங்குடியினர் சான்றிதழ் உடனே வழங்கவும்: அண்ணாமலை
UPDATED : மார் 22, 2024 12:52 PM
ADDED : மார் 22, 2024 12:52 AM
சென்னை:'சீர்மரபு பழங்குடியினர் சான்றிதழ் மட்டும் வழங்குவதை உறுதி செய்யும்படி, தி.மு.க., அரசை வலியுறுத்துகிறேன்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில், 1979 வரை, சீர்மரபு பழங்குடியினர் சான்றிதழ் வழங்கப்பட்டு, அதன் வாயிலாக கல்வி, வேலைவாய்ப்புகளில் சலுகைகள் பெற்று வந்த, 68 சமூகங்களை சேர்ந்த மக்கள், 1979 ஜூலை, 30 அரசாணையின்படி, சீர்மரபு வகுப்பினர் பிரிவில் வகைப்படுத்தப்பட்டனர்.
இதனால், சீர்மரபு பழங்குடியினர் சமூக முன்னேற்றத்திற்காக வழங்கப்பட்டு வந்த பல அரசு சலுகைகள் மறுக்கப்பட்டன. இதைஅடுத்து, சீர்மரபு பழங்குடியினர் பிரிவில் தங்களை மீண்டும் வகைப்படுத்த வேண்டும் என, பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
தமிழக அரசின் இடஒதுக்கீடு மற்றும் சலுகைகளை பெற, சீர்மரபு வகுப்பினர் என்ற சான்றிதழே தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் சலுகைகளை பெற சீர்மரபு பழங்குடியினர் சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இரு சான்றிதழ் வழங்காமல், சீர்மரபு பழங்குடியினர் என்ற ஒற்றை சான்றிதழே வழங்க வேண்டும் என்று, சீர்மரபுபழங்குடி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
கடந்த 2021 சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், இரட்டை சான்று முறையை மாற்றி, ஒற்றை சான்றிதழ் வழங்கப்படும். சீர்மரபு பழங்குடியினர் ஆணையம் அமைக்கப்படும்' என்ற வாக்குறுதிகளை அளித்தார்.
தி.மு.க., ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளாகியும், இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல், 68 சமூக சீர்மரபு பழங்குடியின மக்களை வஞ்சித்து வந்த முதல்வர் ஸ்டாலின், நான்கு நாட்களுக்கு முன் ஒரே சான்றிதழ் வழங்க போவதாக செய்தி குறிப்பு வெளியிட்டார்.
தேர்தல் முடிந்ததும் மீண்டும் இந்த அறிவிப்பை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவார் என, மக்கள் விரக்தி அடைந்துள்ளனர். தி.மு.க., மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை.
எனவே, உடனே, 2019ல் வெளியிடப்பட்ட அரசாணையில் உரிய திருத்தங்கள் செய்து, சீர்மரபு வகுப்பினர் சான்றிதழை புழக்கத்தில் இருந்து நீக்கி, சீர்மரபு பழங்குடியினர் சான்றிதழ் மட்டுமே வழங்கப்படுவதை தி.மு.க., அரசு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

