தி.மு.க.,வுக்கு புதிய பாதை அவசியம்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
தி.மு.க.,வுக்கு புதிய பாதை அவசியம்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
ADDED : ஜூலை 05, 2026 01:12 AM

சென்னை: 'தி.மு.க.,வுக்கு புதிய பாதையை அமைக்க வேண்டியது அவசியம்' என, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தன் கட்சித் தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:
தி.மு.க.,வை போல வென்றவர்களும் இல்லை; தோல்வி கண்டவர்களும் இல்லை. வெற்றியை நாம் தலையில் ஏற்றிக் கொண்டதுமில்லை; தோல்வியை இதயத்தில் தாங்கிக் கொண்டதுமில்லை. அதனால் தான், பீனிக்ஸ் பறவையென மீண்டெழுகிறோம்.
ஒரு சில இயக்கங்களால், ஒரு தோல்வியை கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஆனால், கொள்கை உறவால் வளர்ந்துள்ள தி.மு.க., ஒரு குடும்பம் என, ஆல் போல் வேரூன்றி நிற்கிறது.
அடுத்த நுாறாண்டுகளுக்கு பயணிக்க வேண்டிய திசையை தீர்மானிக்க வேண்டியதும், தொண்டர்களின் உணர்வுகளை உள்வாங்கி, புதிய பாதையை அமைக்க வேண்டியதும் தலைமை தொண்டனான என் கடமை.
அதற்காகவே, 38 பேர் கொண்ட 19 குழுக்களை அமைத்து, தொகுதி வாரியாக சென்று, தொண்டர்களின் உள்ளங்களை அறிந்து வர சொன்னேன். 'உடன்பிறப்பின் குரல்' என்ற இணையதளத்தையும் உருவாக்கினேன்.
தொண்டர்களின் எண்ணங்களின் அடிப்படையில், கட்சியை மறு கட்டுமானம் செய்ய, இளமையும் அனுபவமும் கலந்த மறுசீரமைப்பு ஆலோசனை குழுவை அமைத்துள்ளேன்.
தி.மு.க.,வை போல் அமைப்பு ரீதியான பலம் கொண்ட வேறு கட்சி, இந்தியாவிலேயே கிடையாது என்பதை, மற்ற கட்சிகளை சேர்ந்தவர்கள் கூட ஒப்புக் கொண்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
