கட்சிக்கு ஆள் இழுப்பு விவகாரத்தை முன்னிறுத்தி தி.மு.க., - அ.தி.மு.க., படையெடுப்பு!: கவர்னரை சந்தித்து த.வெ.க.,மீது சரமாரி புகார்
கட்சிக்கு ஆள் இழுப்பு விவகாரத்தை முன்னிறுத்தி தி.மு.க., - அ.தி.மு.க., படையெடுப்பு!: கவர்னரை சந்தித்து த.வெ.க.,மீது சரமாரி புகார்
UPDATED : ஜூலை 05, 2026 10:51 PM
ADDED : ஜூலை 04, 2026 11:58 PM

சென்னை: கவர்னர் ராஜேந்திர அர்லேக்கரை சந்திக்க, தி.மு.க., - அ.தி.மு.க., நிர்வாகிகள் நேற்று லோக்பவனுக்கு அடுத்தடுத்து படையெடுத்தனர். தமிழகத்தில் நடக்கும் ஆள் இழுப்பு விவகாரம் தொடர்பாக, த.வெ.க., மீது சரமாரியாக புகார் அளித்தனர்.
தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள த.வெ.க.,வில், அ.தி.மு.க., நிர்வாகிகள் தினந்தோறும் இணைந்து வருகின்றனர். அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஆறு பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க.,வில் இணைந்து உள்ளனர்.
அதேபோல, தி.மு.க.,வில் அதிருப்தியில் இருப்பவர்களும் த.வெ.க.,வில் சேர்ந்து வருகின்றனர். சென்னையில் நேற்று, தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் உள்ளிட்டோர் த.வெ.க.,வில் இணைந்தனர் .
த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்களை இழுக்க, தி.மு.க., பேரம் பேசியதாக, ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பதிலுக்கு தங்கள் எம்.எல்.ஏ.,க்களை இழுக்க, த.வெ.க., பேரம் பேசி வருவதாக, தி.மு.க., குற்றஞ்சாட்டி வருகிறது.
இந்நிலையில், தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, சட்டப்பிரிவு இணை செயலர் பரந் தாமன், ராஜ்யசபா எம்.பி., வில்சன், எம்.எல்.ஏ., ஆஸ்டின் ஆகியோர், நேற்று கிண்டி லோக்பவனில் கவர்னர் ராஜேந்திர அர்லேக்கரை சந்தித்தனர்.
அப்போது, த.வெ.க., அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகவும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களை இழுக்க விலை பேசுவதாகவும் புகார் அளித்தனர்.
இதன்பின், ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டி:தமிழகத்தில் நடக்கும் குதிரை பேரம், அதிகார துஷ்பிரயோகம் பற்றி கவர்னரிடம் தெரிவித்தோம். அமைச்சரவை கூட்டத்தில், அரசுக்கு தொடர்பில்லாத ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகியோர் இருந்தனர். அவர்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிடும் கேவலமான நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்தும் புகார் தெரிவித்தோம். கவர்னர் சிரித்துக் கொண்டே, 'அவசியம் என்றால், அவர்களையும் அமைச்சராக்கிக் கொள்ள வேண்டியது தானே' என்றார்.
தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஆஸ்டின், சீனிவாசன் ஆகியோரிடம், 50 கோடி ரூபாய் வழங்குவதாக த.வெ.க., பேரம் பேசியுள்ளது. இது குறித்தும் புகார் தெரிவித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க.,வை தொடர்ந்து, அ.தி.மு.க., - எம்.பி., இன்பதுரை, முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கவர்னரை சந்தித்தனர். அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை ராஜினாமா செய்ய வைத்து, த.வெ.க.,வில் சேர்த்து வருவது குறித்து புகார் தெரிவித்தனர்.
பின்னர், இன்பதுரை அளித்த பேட்டி: த.வெ.க., ஆட்சி அமைக்கும் முன், குதிரை பேரத்தை அனுமதிக்க மாட்டோம் என்று கவர்னர் தெரிவித்தார். இப்போது, குதிரை பேரம் நடந்து கொண்டிருக்கிறது. அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்து, த.வெ.க.வில் இணைந்துள்ளனர். அமைச்சரவை கூட்டத்தில் தனிநபர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதே புகாரில், 1991ல் தி.மு.க., ஆட்சி கலைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில், 'எனக்கு என்ன அதிகாரம் உள்ளது' என, கவர்னர் கேட்டார். சட்டப்பிரிவு 167ன் கீழ் அதிகாரம் உள்ளது என்று தெரிவித்தோம். அதன்படி விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம். அதில், திருப்தி இல்லை என்றால், சட்டப்பிரிவு 356ன் கீழ் மத்திய அரசுக்கு, கவர்னர் அறிக்கை அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
ஒரே நாளில் தி.மு.க., - அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., தலைவர்கள் கவர்னரை சந்தித்து, த.வெ.க., மீது சரமாரியாக புகார் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் கண்டனம் இதற்கிடையில் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்ட அறிக்கையில், 'அமைச்சர் விஸ்வநாதன் தெளிவான விளக்கம் அளித்த பின்னும், அவரை பதவி நீக்கம் செய்ய கோரியிருப்பது, பா.ஜ.,வின் வெறுப்பு அரசியலை காட்டுகிறது' என கூறியுள்ளார்.
