பழனிசாமியின் துரோகங்களுக்கு 2026ல் இறுதி தீர்ப்பு: தினகரன்
பழனிசாமியின் துரோகங்களுக்கு 2026ல் இறுதி தீர்ப்பு: தினகரன்
ADDED : டிச 02, 2025 04:50 AM

திருமங்கலம்: ''அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி செய்யும் துரோகங்களுக்கு, வரும் 2026 தேர்தலில் இறுதி தீர்ப்பு எழுதப்படும்,'' என அ.ம.மு .க., பொதுச்செயலர் தினகரன் தெரிவித்தார்.
மதுரை திருமங்கலத்தில் தினகரன் நேற்று அளித்த பேட்டி: பழனிசாமி முதல்வராக இருந்தபோது, 2017ல் தி.மு.க., கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தில், பழனிசாமிக்கு ஆதரவாக இருந்து அவரை முதல்வராக்கிய 18 எம்.எல்.ஏ.,க்களை பழனிசாமி நீக்கினார்.
தற்போது, கோபி தொகுதிக்கு சென்று, 'பதவியை ராஜினாமா செய்யும் முன், தொகுதி மக்களிடம் செங்கோட்டையன் கேட்டாரா?' என பழனிசாமி கேட்கிறார். அப்படி என்றால், 18 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யும்போது, அந்தந்த தொகுதி மக்களிடம் கேட்டாரா?
அ.தி.மு.க.,வில், தன்னைச் சுற்றி சில கைத்தடிகளை வைத்துக்கொண்டு, எம்.ஜி.ஆர்., கொண்டு வந்த சட்ட விதிகளை, தனக்கு சாதகமாக மாற்றினார்; அ.தி.மு.க., தொண்டர்களை கேட்டுத்தான் அவற்றை மாற்றினாரா?
துரோகத்திற்கு நோபல் பரிசு கொடுப்பதாக இருந்தால், பழனிசாமிக்கு தான் கொடுக்க வேண்டும் என செங்கோட்டையன் கூறினார்.
கடந்த 2017ல் இருந்து தற்போது வரை, பழனிசாமி செய்த துரோகங்களுக்கு, ஆண்டவன் தண்டனை வழங்கிக் கொண்டே இருக்கிறார். வரும் 2026 தேர்தலில், அவரது துரோகத்திற்கு இறுதி தீர்ப்பு எழுதப்படும்.
அ.தி.மு.க., என்ற கட்சியை இல்லாமல் செய்து, இரட்டை இலை சின்னம் கையில் இருக்கிறது என்ற அகம்பாவம், ஆணவம், பதவி வெறி, பணத்திமிரில் இருக்கும் பழனிசாமிக்கு, மக்கள் சரியான பாடம் புகட்டுவர். இவ்வாறு அவர் கூறினார்.
தினகரன் வெளியிட்ட அறிக்கையில், 'தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலில், அ.ம.மு.க., சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புபவர்கள் தங்களுடைய விருப்ப மனுக்களை, சென்னை அடையாறில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், வரும் 10 முதல் 18ம் தேதி வரை பெறலாம்' என தெரிவித்துள்ளார்.

