முன்னாள் அமைச்சருக்கு பண மோசடியில் தொடர்பு: கைதானவர் வாக்குமூலம்
முன்னாள் அமைச்சருக்கு பண மோசடியில் தொடர்பு: கைதானவர் வாக்குமூலம்
ADDED : ஜூலை 08, 2026 06:00 AM

சென்னை: 'அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கும் தொடர்பு உள்ளது' என, கைதான நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அரியலுார் மாவட்டத்தை சேர்ந்தவர் இளஞ்செழியன். இவர் கடந்த, தி.மு.க., ஆட்சியில், போக்குவரத்து துறையில் உதவிப் பொறியாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி, பலரிடமும், 23 லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்துள்ளார். இவரை, சென்னை மாநகர போலீசின், மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவரை, ஏழு நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, இம்மோசடி தொடர்பாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு, 'சம்மன்' அனுப்பி, அவரிடம் விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
அப்போது, 'இளஞ்செழியன் என்பவர் யார் என்றே எனக்கு தெரியாது. அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை' என, போலீசாரிடம் சிவசங்கர் தெரிவித்து உள்ளார்.
ஆனால், சிவசங்கருடன், இளஞ்செழியன் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்களை போலீசார் திரட்டி உள்ளனர். அதன் அடிப்படையில், இளஞ்செழியனிடம் விசாரித்தபோது, 'பண மோசடியில் சிவசங்கருக்கு தொடர்பு உள்ளது. அவர் கூறியதால், சிவசங்கரின் வலது கரமாக இருந்த நபர்களிடம் பணம் கொடுத்தேன்' என, இளஞ்செழியன் வாக்குமூலம் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், சிவசங்கரை மீண்டும் விசாரிக்க போலீசார் முடிவு செய்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.
