மின்வாரிய ஹார்டு டிஸ்க்குகள் காணாமல் போனது எப்படி? செந்தில்பாலாஜி தானாக திடீர் விளக்கம்
மின்வாரிய ஹார்டு டிஸ்க்குகள் காணாமல் போனது எப்படி? செந்தில்பாலாஜி தானாக திடீர் விளக்கம்
UPDATED : ஜூன் 05, 2026 12:05 AM
ADDED : ஜூன் 04, 2026 11:46 PM

- நமது நிருபர் -
தமிழக மின் வாரியத்தில், 'டிரான்ஸ்பார்மர்'கள் கொள்முதலில் நடந்த, 397 கோடி ரூபாய் முறைகேடு குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கு பதிந்துள்ள நிலையில், மின் வாரிய தலைமை அலுவலகத்தில், டெண்டர் ஆவணங்கள் இடம் பெற்ற, 20க்கும் மேற்பட்ட, 'ஹார்டு டிஸ்க்'குகள் திருடப்பட்டு உள்ளன. இந்நிலையில், ''இந்த விவகாரத்தை பூதாகரமாக்கும் முயற்சி எடுபடாது,'' என, மின்துறையின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் விளக்கம் அளித்துள்ளார்.
ஸ்டாலின் தலைமையிலான, தி.மு.க., ஆட்சி அமைந்த பின், 2021 - 2023 வரை, மின் வாரியத்திற்கு, 45,800 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்யப்பட்டன. ஒவ்வொன்றும், 50 சதவீதம் வரை கூடுதல் விலை கொடுத்து வாங்கப்பட்டதில், மின் வாரியத்திற்கு, 397 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக புகார் கூறப்பட்டது.
இதில், 500 கிலோ வோல்ட்ஸ் ஆம்பியர் திறன் உடைய, 800 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய கோரப்பட்ட டெண்டர்கள், 2021 நவ, 23ல் திறக்கப்பட்டன. அப்போது, அதில் பங்கேற்ற, 26 ஒப்பந்ததாரர்கள் சொல்லி வைத்தது போல, ஒரு டிரான்ஸ்பார்மருக்கு, 13 லட்சத்து, 72,930 ரூபாய் என, விலை குறிப்பிட்டு இருந்தனர்.
இதனால், ஒப்பந்ததாரர்களுடன் பேச்சு நடத்தி, விலையை குறைத்து, 12 லட்சத்து, 49,800 ரூபாய்க்கு கொள்முதல் செய்ததாக, மின் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசால் நடத்தப்படும் மின்னணு சந்தை தளத்தில், ஒரு டிரான்ஸ்பார்மரின் விலை, 8 லட்சத்து, 91,000 ரூபாய் தான் என, குறிப்பிடப்பட்டு இருந்தது.
மின் வாரிய பொறியாளர் சங்கத்தினர், ஒரு டிரான்ஸ்பார்மரை, 7 லட்சத்து, 89,753 ரூபாய்க்கு வாங்கி விடலாம் என்று தெரிவித்து வந்தனர். ஆனால், அதை விடவும் குறைவாக, ராஜஸ்தான் அரசு, 7 லட்சத்து, 87,311 ரூபாய்க்கு கொள்முதல் செய்துள்ளது.
இதனால், அப்போதைய ஆட்சியாளர்களின் ஆசி பெற்ற ஒப்பந்ததாரர்கள், திட்டமிட்டு சந்தை விலையை விட, 50 சதவீதம் கூடுதலாக விலையை நிர்ணயம் செய்துள்ளனர்.
அதன்பின், மின் வாரியம் கேட்டுக் கொண்டதால், சிறிதளவு விலையை குறைத்துள்ளனர். தி.மு.க., ஆட்சியாளர்களும், ஒப்பந்ததாரர்களும் திட்டமிட்டு, ஊழல் நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர் என, அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டி வந்தது.
அந்த இயக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் அ.தி.மு.க., சார்பில், இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சி.பி.ஐ., அதிகாரிகளின் விசாரணைக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்த தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்களை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
போலீசில் புகார்
இந்நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின் வாரிய தலைமை அலுவலகத்தில், மின் வாரிய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., அறையில் உள்ள கணிணியில் இருந்த ஹார்டு டிஸ்க் மற்றும் டெண்டர்கள் உட்பட பல்வேறு டிஜிட்டல் ஆவணங்கள் அடங்கிய, 20 ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டுள்ளன.
கடந்த மாதம், 20ம் தேதி, இதைக் கண்டறிந்த பொறியாளர் மலர்விழி, தன் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். மின் வாரிய அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மே, 16 மற்றும், 17 ஆகிய வார இறுதி நாட்களில், குறைந்த அளவு ஊழியர்கள் பணியில் இருந்த போது, ஹார்டு டிஸ்க் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
யார் திருடியது என்பதை கண்டறிய முடியாமல் அதிகாரிகள் திணறினர். பின், வேறு வழியின்றி, ஜூன் 1ம் தேதி, சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில், மலர்விழி புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட, 4, 5, 7 மற்றும் 9வது தளங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
கணினி பராமரிப்பாளர்
இதில், பெரும்பாலான கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்து உள்ளதால், கிடைத்த காட்சிகளை வைத்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கணிணி பராமரிப்பாளர்களை தவிர, வேறு வெளியாட்கள் யாரும் வரவில்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து, 'ஆர்ம்டேக் கம்யூட்டர்ஸ்' என்ற நிறுவனத்தை சேர்ந்த கணிணி பராமரிப்பாளர் கோபிநாத், 31 என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது, ஹார்டு டிஸ்க்குகளை திருடி, அவற்றை கர்நாடக மாநிலம் பெங்களூரில் பணத்திற்கு விற்று விட்டதாக, அவர் கூறினார்.
அவரை கைது செய்த போலீசார், ஹார்டு டிஸ்க்குகளை பறிமுதல் செய்வதற்காக நேற்று அவரை பெங்களூரு அழைத்துச் சென்றனர். யாருக்காக திருடினார்; யார் பணம் கொடுத்தது; எவ்வளவு பணம் கொடுத்தனர் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மிரட்டுகின்றனர்
இதற்கிடையே, மின்துறையின் முன்னாள் அமைச்சரும், தி.மு.க.,வைச் சேர்ந்தவருமான செந்தில் பாலாஜி அளித்த பேட்டி: மின் வாரியத்தில் முக்கியமான, 'ஹார்ட் டிஸ்க்'கள் தொலைந்துள்ளதாகவும், தனிப்பட்ட முறையில் தன்னையே சிலர் மிரட்டுவதாகவும், மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார். அமைச்சரையே மிரட்டுகின்றனர் என்றால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த நிலையில் உள்ளது?
மின் வெட்டு காரணமாக, பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மின் வினியோகம் குறித்து, அதிகாரிகளை அழைத்து ஆய்வு கூட்டமே நடத்தவில்லை.
துறையில் ஒரு சதவீதம் கருப்பு ஆடுகள் இருக்கின்றன என்றால், மீதமுள்ள, 99 சதவீதம் பேரை கொண்டு அவர்களை கண்டுபிடிக்கலாம் அல்லவா? ஆட தெரியாதவர்கள், மேடை கோணல் என்பர். துறையை புரிந்து கொள்வதற்கு எந்த தகுதியும் இல்லை.
தவறு நடந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், இவர்கள் தவறை பூதாகரமாக்குகின்றனர்; அந்த முயற்சி எடுபடாது. இவ்வாறு அவர் கூறினார்.
