அறிவிப்பு பலகையில் கட்டண விபரம் தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு
அறிவிப்பு பலகையில் கட்டண விபரம் தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு
ADDED : ஜூலை 09, 2026 12:18 AM
சென்னை: 'தகவல் உரிமை சட்டத்தின் வரம்புக்குள் தனியார் பள்ளிகள் வராது' என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், கல்வி கட்டணங்களை பள்ளிகளின் அறிவிப்பு பலகைகளில் வெளியிட உத்தரவிட்டு உள்ளது.
அரசு நிர்ணயித்துள்ள கல்வி கட்டண விபரங்களை, தனியார் பள்ளிகளின் விளம்பர பலகைகளில் வெளியிடுவதை கட்டாயமாக்கும்படி, தனியார் பள்ளிகள் இயக்குநருக்கு, மாநில தகவல் ஆணையம் மே 25ம் தேதி உத்தரவிட்டது.
அதன்படி, அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பிற வாரிய பள்ளிகளுக்கு, தனியார் பள்ளிகள் இயக்குநர், ஜூன் 1ம் தேதி சுற்றறிக்கை பிறப்பித்தார்.
இந்நிலையில், மாநில தகவல் ஆணைய உத்தரவை யும், தனியார் பள்ளிகள் இயக்குநர் பிறப்பித்த அறிவிப்பையும் ரத்து செய்யக் கோரி, அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் சார்பில், அதன் பொதுச் செயலர் கே.பழனியப்பன், சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, ''தகவல் உரிமை சட்டத்தின் வரம்புக்குள் தனியார் பள்ளிகள் வராது என்ற போதும், தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டப்படி, நியாய தன்மையை வெளிப்படுத்த, அனைத்து தனியார் பள்ளிகளும், கல்விக் கட்டண விபரங்களை, விளம்பர பலகைகளில் வெளியிட வேண்டும்,'' என உத்தரவிட்டார்.
