ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேர் கைது இலங்கை கடற்படையினர் அராஜகம்
ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேர் கைது இலங்கை கடற்படையினர் அராஜகம்
ADDED : மார் 18, 2024 01:24 AM

ராமேஸ்வரம்: நடுக்கடலில் மீன்பிடித்த ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து மார்ச் 16 ல் 540 விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள் வழக்கம் போல் மீன்வளம் நிறைந்த இந்திய, இலங்கை எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அங்கு இரு கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியை காட்டி எச்சரித்து மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டினர். அச்சமடைந்த மீனவர்கள் கடலில் வீசிய வலைகளை படகில் இழுத்து வைத்து கொண்டு படகுகளுடன் நாலாபுறமும் ஓடினர்.
அப்போது இரு படகுகளில் இருந்த மீனவர்கள் வலையை இழுக்க தாமதம் ஆனதால் ஆத்திரமடைந்த இலங்கை வீரர்கள், அவற்றை மடக்கி பிடித்து அதிலிருந்த மீனவர்கள் ஆரோக்கியசுகந்தன் 38, அருள்டிப்ஷன் 18, சாமுவேல் 19, அந்தோணி 25, சுப்பிரமணி 69, பூமிநாதன் 35, ராஜ் 42, சுந்தரபாண்டி 48, சீனிப்பாண்டி 38, பாலுச்சாமி 54, ராயப்பு லியோனார்ட் 32, சக்திவேல் 37, அந்தோணிலோபர்ஸ் 34, அடிமை 48, குரூஸ்திவாகர் 35, யோசுவா 42, அஜித்குமார் 28, பிரவீன் 27, ரெஜிஸ் 29, செந்தில் 44, இருளாண்டி 40, ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று இலங்கை மீன்துறையினர் வழக்கு பதிந்து, ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மீனவர்களை மார்ச் 27 வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிமன்றம்உத்தரவிட்டது.

