கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம்: சிறுமிகளுக்கு வெறும் ரூ.3 லட்சமா எச்.ராஜா ஆவேசம்
கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம்: சிறுமிகளுக்கு வெறும் ரூ.3 லட்சமா எச்.ராஜா ஆவேசம்
ADDED : பிப் 20, 2025 09:11 PM
இளையான்குடி:தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் நிலையில் கண்மாயில் மூழ்கி பரிதாபமாக இறந்த சிறுமிகளுக்கு வெறும் ரூ.3 லட்சம் தானா என பா.ஜ.,தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா ஆவேசத்துடன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள ஆழிமதுரை கிராமத்தில் நேற்று பள்ளி மற்றும் அங்கன்வாடிக்கு சென்ற சிறுமிகள் ஷோபிதா 8, கிறிஸ்மிகா 4, சிறுநீர் கழிக்க சென்ற போது கண்மாயில் மூழ்கி பலியாகினர்.
சிறுமிகளின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிய அவர் கூறியதாவது:
ஆழிமதுரை அரசு துவக்கப் பள்ளியில் கழிப்பறை வசதி இருந்தும் மாணவிகளை அங்கு செல்ல விடாமல் ஆசிரியர்கள் தடுப்பதாக புகார்கள் வந்துள்ளன. ஆசிரியர்களே மாணவிகளிடம் பிளாஸ்டிக் கப் கொடுத்து கண்மாய்க்கு செல்லும்படி கூறியுள்ளனர். இதனால் சிறுமிகள் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.
கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களுக்கு நிவாரணமாக ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது. ஆனால், இச்சிறுமிகளுக்கு நிவாரணமாக ரூ.3 லட்சம் வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே, நிவாரணத் தொகையாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும், அவர்களது பெற்றோர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

