ADDED : நவ 14, 2025 01:19 AM

தாம்பரம்: வீட்டுமனையை பதிவு செய்ய, 2 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, தாம்பரம் பெண் சார் - பதிவாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
தாம்பரத்தை அடுத்த நெடுங்குன்றத்தைச் சேர்ந்தவர் பிரவின்குமார். இவர், நெடுங்குன்றத்தில் உள்ள, 2,400 சதுர அடி நிலத்தை பதிவு செய்ய, தாம்பரம் சார் - பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
விண்ணப்பத்தை பரிசீலித்து பதிவு செய்ய, சார் - பதிவாளர் ரேவதி, 10 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். பத்திரப்பதிவின்போது, 2 லட்சம் ரூபாய் தருவதாகவும், மீதி 8 லட்சத்தை பத்திரம் வாங்கும்போது, தருவதாக கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரவின்குமார், சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று, தாம்பரம் சார் - பதிவாளர் அலுவலகத்தை கண்காணித்தனர்.
அப்போது, லஞ்ச பணத்தை வாங்கிய ரேவதியை, கையும் களவுமாக கைது செய்தனர். ரேவதிக்கு உடந்தையாக இருந்த புரோக்கர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

