போலீஸ் காவலில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் இழப்பீடு
போலீஸ் காவலில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் இழப்பீடு
ADDED : டிச 09, 2025 07:49 AM

சென்னை: திருப்பூரில் போலீஸ் காவலில் இருந்தபோது இறந்தவரின் குடும்பத்திற்கு, 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு, தமிழக அரசுக்கு, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், கொடுவாய் நாகலிங்கபுரம், லட்சுமி நகரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தாக்கல் செய்த மனு:
கடந்த, 2011 ஏப்ரல் 7ம் தேதி, கிருஷ்ணமூர்த்தி என்பவர் கொடுத்த புகாரில், என் மகன் சதீஷ்குமாரை விசாரணைக்காக, அவினாசிபாளையம் போலீசார் அழைத்துச் சென்றனர்.
அப்போது, புகார்தாரர் கிருஷ்ணமூர்த்தி தாக்கியதில், என் மகன் சதீஷ்குமார் உயிரிழந்தார்.
போலீஸ் வசம் இருந்தபோதும், அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர். போலீசாரின் அலட்சிமே இதற்கு காரணம். எனவே, இதற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், நேற்று பிறப்பித்த உத்தரவு:
போலீசாரின் பாதுகாப்பில் இருக்கும்போது, சதீஷ்குமார் கொல்லப்பட்டது, ஆணையத்தின் விசாரணையில் உறுதியாகியுள்ளது. போலீசார் அலட்சியமாக நடந்து கொண்டுள்ளனர்.
இதில் சம்பந்தப்பட்ட இரு போலீசாருக்கு, ஊதிய குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால், அவர்கள் மீது மேலும் துறை ரீதியான நடவடிக்கை தேவைஇல்லை.
காவல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும்போது, அலட்சியம் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதால், அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.
அதன்படி உயிரிழந்த சதீஷ்குமார் குடும்பத்திற்கு, தமிழக அரசு, ஒரு மாதத்திற்குள், 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

