எஸ்.எஸ்.ஐ படுகொலை சம்பவம் முதல்வர் ஸ்டாலினுக்கு எச்சரிக்கை மணி; அண்ணாமலை
எஸ்.எஸ்.ஐ படுகொலை சம்பவம் முதல்வர் ஸ்டாலினுக்கு எச்சரிக்கை மணி; அண்ணாமலை
UPDATED : ஆக 06, 2025 03:54 PM
ADDED : ஆக 06, 2025 12:05 PM

சென்னை: ''இவ்வளவு பெரிய குற்றத்திலிருந்து தப்ப முடியாது என்பது நன்கு தெரியும். ஆனாலும் அதை செய்கிறார்கள் ஏன்? இந்த சம்பவம் முதல்வர் ஸ்டாலினுக்கு எச்சரிக்கை மணியாக இருக்கும்'' என போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., கொலை சம்பவத்திற்கு தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில் நேற்று இரவு சீருடையில் இருந்த போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., சண்முகவேல் கொல்லப்பட்டு உள்ளார். இது நமது சமூகம் அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டு இருப்பதற்கான அறிகுறியாகும்.
குற்றவாளிகள் அல்லது ஒரு சாதாரண மனிதர் கோபத்தில் ஒரு போலீஸ்காரர் மீது கொடூர தாக்குதல் நடத்தி, பொது இடத்தில் கொல்லத் தூண்டுவது எது? அவர்களின் மனசாட்சிப்படி, இவ்வளவு பெரிய குற்றத்திலிருந்து தப்ப முடியாது என்பது நன்கு தெரியும். ஆனாலும் அதை செய்கிறார்கள் ஏன்?
அதிகாரத்தில் உள்ள அரசாங்கத்தாலும், சில்லறை விற்பனையாளர்களாகச் செயல்படும் அரசாங்க கடைகளாலும், அதிக போதை உள்ள மதுக்களால் சாத்தியமாக்கப்பட்டது.
போதைப்பொருட்களின் பயன்பாடு அதிகரித்தல் உள்ளிட்ட காரணங்களால் கிராமம் முதல் நகர்ப்புறம் வரை எல்லா இடங்களிலும் சட்டம் ஒழுங்கு மோசமடைந்து வருகிறது.
குறிப்பாக கீழ் மட்டங்களில் உள்ள துணை ஆய்வாளர் மற்றும் அதற்குக் கீழே பொறுப்பு வகிப்பவர்கள் உட்பட அனைத்து போலீசாரும் தொழில்நுட்ப ரீதியாக ஆயுதம் ஏந்தியிருக்க வேண்டிய நேரம் இது.
டேசர் துப்பாக்கிகள், பாடி கேமராக்கள், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கிகள் கொள்முதல் அதிகரித்தல், சிறந்த ரோந்து கார்கள், மிக முக்கியமாக, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டும். போலீசார் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளுக்கு 'நண்பர்' இல்லாமல் தனியாகச் செல்லக்கூடாது.
உயர்மட்டத்தில் எடுக்கப்படும் தவறான கொள்கை முடிவு, கீழ்மட்டத்தில் உள்ள சாமானிய மக்களை நேரடியாக பாதிக்கின்றன. இது நமது தூங்கிக்கொண்டிருக்கும் தமிழக உள்துறை அமைச்சரான, நமது முதல்வருக்கு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
நயினார் நாகேந்திரன் கண்டனம்
அவரது அறிக்கை: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்டோர்களை விலக்கச் சென்ற சிறப்பு போலீஸ் எஸ்.ஐ., வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட செய்தி மனதை பதைபதைக்க வைக்கிறது. திமுக ஆட்சியில் கட்டுக்கடங்காமல் பெருகிவரும் குடிப்பழக்கத்தாலும் போதைப்பொருள் புழக்கத்தாலும் பொது மக்களுக்கு தான் பாதுகாப்பில்லை என்று பார்த்தால், மக்களைக் காக்கும் போலீசாரின் உயிருக்கும் உத்திரவாதமில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
தப்புக்கணக்கு
பொதுவெளியில் மது அருந்துவதும், மதுபோதையில் மற்றவர்களைத் தொந்தரவு செய்வதும், அதைத் தட்டிக்கேட்பவர்களைக் கொலை செய்வதும் தற்போது சர்வ சாதாரணமாகிவிட்டது மக்களைக் கொதிப்படையச் செய்துள்ளது. எனவே, தங்கள் நிர்வாகக் குளறுபடிகளால் உயிரிழப்பவர்களுக்கு இழப்பீட்டு தொகையைக் கொடுத்து மக்களை மடைமாற்றி விடலாம் என்ற திமுகவின் தப்புக்கணக்கு இனி செல்லுபடியாகாது.
பலிக்கும்! ஒழியும்!
சட்டம் ஒழுங்கை சீர்படுத்த முடியாமல் அனைத்துப் பிரிவினரையும் அவதிக்குள்ளாக்கும் இந்த திமுக அரசின் ஆட்சிக்காலம் எப்போது முடியும் என மக்கள் பிரார்த்திக்கத் துவங்கிவிட்டனர். வரும் சட்டசபை தேர்தலில் மக்களின் அனைத்து வேண்டுதல்களும் பலிக்கும்! திமுக ஆட்சி ஒழியும். இவ்வாறு தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

