சமூக நலத்துறையில் 16,780 பணியிடங்களுக்கு நேர்காணல் முடிந்தும் நியமன ஆணை தரவில்லை தேர்வானவர்கள் கடும் அதிருப்தி
சமூக நலத்துறையில் 16,780 பணியிடங்களுக்கு நேர்காணல் முடிந்தும் நியமன ஆணை தரவில்லை தேர்வானவர்கள் கடும் அதிருப்தி
ADDED : நவ 14, 2025 12:41 AM
சென்னை: சமூக நலத்துறையில், 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்கள் உட்பட, 16,780 பணியிடங்களுக்கான நேர்காணல் முடிந்து இரு மாதங்களாகியும், பணி நியமன ஆணை வழங்காதது, தேர்வாகி பணிக்கு காத்திருப்போரிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
சமூக நலத்துறை சார்பில், எம்.ஜி.ஆர்., சத்துணவு திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும், மாணவ, மாணவியருக்கு, மதிய உணவு வழங்கப்படுகிறது.
அறிவிப்பு இப்பணியில், மாநிலம் முழுதும் உள்ள, 43,143 சத்துணவு மையங்களில், 1.20 லட்சம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்கள், தொகுப்பூதிய முறையில் நிரப்பப்பட உள்ளதாக, கடந்த ஆண்டு டிச., மாதம், சமூக நலத்துறை சார்பில், அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தேர்வு செய்து நியமிக்கப்படும் ஊழியர்கள், 12 மாத பணிக்கு பின், சிறப்பு கால ஊதிய முறைக்கு மாற்றப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, இப்பணியிடங்களுக்கான நேர்காணல், ஆட்கள் தேர்வு உள்ளிட்டவை முடிந்த நிலையில், தற்போது வரை பணி நியமன ஆணை வழங்கப்படாமல் இருப்பது, தேர்வானவர்கள் இடையே, கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
அதேபோல, அங்கன்வாடி மையங்களில், காலியாக உள்ள 7,783 பணியிடங்களை நிரப்ப, கடந்த மார்ச் மாதம் அறிவிப்பு வெளியானது. நேர்காணல் முடிந்த நிலையில், அவர்களுக்கும் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை.
இதுகுறித்து, தேர்வான நபர்கள் சிலர் கூறியதாவது:
கடந்த சட்டசபை கூட்டத்தில், சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் பணியாற்ற, நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள், ஒரு மாதத்திற்குள் பணியில் நியமிக்கப்படுவர் என, அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
நாள் கடத்துகின்றனர் ஆனால், ஐந்து மாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் இல்லை. கடந்த ஆக., 15ம் தேதி பணி நியமன ஆணை வழங்குவதாக கூறினர். அதன்பின் ஒவ்வொரு மாதமாக கடத்தி வருகின்றனர்.
தற்போது, ஜனவரியில் உறுதியாக பணி நியமன ஆணை வழங்குவோம் என, அதிகாரிகள் கூறுவது வேதனையாக உள்ளது.
தேர்வான நபர்களுக்கு, பணி நியமன ஆணையை விரைந்து வழங்க அமைச்சர் கீதா ஜீவன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

