ஒரே டிக்கெட்டில் அரசு பஸ்களில் பயணம்; செயலியை மேம்படுத்த முடிவு
ஒரே டிக்கெட்டில் அரசு பஸ்களில் பயணம்; செயலியை மேம்படுத்த முடிவு
ADDED : ஜூலை 07, 2026 11:52 PM

சென்னை: தமிழக போக்குவரத்து துறை செயலி வாயிலாக, விரைவு, மாநகர அரசு பஸ்கள் மற்றும் மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
சென்னை பல்லவன் இல்லத்தில் உள்ள, மாநகர போக்குவரத்து கழக தலைமையகத்தில், போக்குவரத்து துறை அமைச்சர் பார்த்திபன் தலைமையில், போக்குவரத்து துறை 'ஆன்லைன்' முன்பதிவு மற்றும் செயலியை மேம்படுத்துவது குறித்து, நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.
இது குறித்து, அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் வாயிலாக, தினமும் இயக்கப்படும், 2,500க்கும் அதிகமான விரைவு பஸ்களில், 'ஆன்லைனில்' முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.
இதை தினமும் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியை மேம்படுத்துவது குறித்து, அமைச்சருடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
போக்குவரத்து துறையின் www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் அதன் செயலியை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
சென்னையில் இருந்து வெளியூர் பயணம் செய்வோர், ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யலாம். வெளியூர் விரைவு மற்றும் நகர பஸ்களின் டிக்கெட், மெட்ரோ ரயில் டிக்கெட் ஆகியவற்றை, செயலியில் எடுக்கும் வசதியை கொண்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
