விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் எதிர்ப்பு: மாவட்ட செயலர்கள் நியமனத்தில் இழுபறி
விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் எதிர்ப்பு: மாவட்ட செயலர்கள் நியமனத்தில் இழுபறி
ADDED : டிச 02, 2025 04:55 AM
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியில், நிர்வாகிகள் எதிர்ப்பு காரணமாக, 234 சட்டசபை தொகுதிவாரியாக மாவட்ட செயலர்கள் நியமிப்பதில் இழுபறி நீடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, வரும் 2026 சட்டசபை தேர்தலில், தென்மாவட்டங்கள், கொங்கு மண்டலங்கள் என, 15க்கும் அதிகமான தொகுதிகளில் போட்டியிட முயற்சித்து வருகிறது.
இதற்காக 234 தொகுதிகளையும், கட்சி ரீதியாக மாவட்டங்களாக பிரித்து மாவட்ட செயலர்களை நியமிக்கும் நடவடிக்கையில், அக்கட்சி தலைவர் திருமாவளவன் ஈடுபட்டுள்ளார். இப்பதவிக்கு 22,000 பேர் விண்ணப்பித்த நிலையில், 20 சதவீதம் மாவட்ட செயலர்கள் நியமனத்தில் இழுபறி நீடித்து வருகிறது.
சில மாவட்ட செயலர்கள் நியமனத்திற்கு, கட்சி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவிப்பதால், பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
வி.சி., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
புதிய நியமனத்தில் ஏற்கனவே மாவட்ட செயலராக இருந்த சிலருக்கு, மீண்டும் அப்பதவி வழங்கப்படாததால், அவர்களுடைய ஆதரவாளர்கள், புதியவர்களை நியமிக்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
அதேபோல், கட்சியில் பெரிதாக செயல்படாமல் இருக்கும் ஒரு சிலரை பொறுப்புகளில் நியமிப்பதற்கும், கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அவர்களை சமாதானப்படுத்தும் பணி நடந்து வருகிறது. ஆனாலும், கட்சித் தலைமை, மாவட்ட செயலர்களை இறுதி செய்து விட்டது. விரைவில் திருமாவளவன் அதற்கான அறிவிப்பை வெளியிடுவார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

