தேவைப்பட்டால் கைத்தறி துறைக்கும் வெள்ளை அறிக்கை; அமைச்சர் தகவல்
தேவைப்பட்டால் கைத்தறி துறைக்கும் வெள்ளை அறிக்கை; அமைச்சர் தகவல்
ADDED : ஜூலை 02, 2026 10:20 PM

ஈரோடு: கடந்த ஆட்சியில் கைத்தறி துறையில் முறைகேடு ஏதேனும் நடந்துள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து வருவதால், வெள்ளை அறிக்கை தேவைப்படும் பட்சத்தில் வெளியிடப்படும் என கைத்தறி மற்றும் விசைத்தறி துறை அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்தார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இலவச வேட்டி, சேலை திட்டத்திற்கு தேவையான நுால், 642.88 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதற்காக முதற்கட்டமாக, 300 கோடி முன்பணம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
நுால் கொள்முதல் டெண்டர் விண்ணப்பங்கள் வரும், 23ம் தேதி வரை சமர்ப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. அதன் பின் ஓபன் டெண்டர் நடத்தி நுால் கொள்முதல் செய்யும் பணி துவங்கப்படும்.
அதற்கு பிறகு இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்யும் இடங்கள், ஒவ்வொரு இடத்திலும் உள்ள தறிகள் கணக்கெடுக்கப்பட்டு, அனைவருக்கும் சரிசமமாக ஆர்டர் வழங்க ஏற்பாடு செய்யப்படும். கடந்த முறை இலவச வேட்டி, சேலையில், பாலியஸ்டர் நுால் கலந்ததாக புகார் எழுந்தது குறித்து ஆய்வு நடந்து வருகிறது.
கடந்த ஆட்சியில் கைத்தறி துறையில் முறைகேடு ஏதேனும் நடந்துள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து வருவதால், வெள்ளை அறிக்கை தேவைப்படும் பட்சத்தில் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, ஒப்புதல் பெற்று அறிக்கை வெளியிடப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
