லண்டனில் 100 ஆண்டுகளாக இயங்கும் 'வீராசாமி' ஹோட்டலை காலி செய்ய உத்தரவு
லண்டனில் 100 ஆண்டுகளாக இயங்கும் 'வீராசாமி' ஹோட்டலை காலி செய்ய உத்தரவு
ADDED : நவ 16, 2025 11:49 PM

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் உள்ள ரீஜென்ட் தெருவில் 'வீராசாமி இந்திய உணவகம்' 1926ம் ஆண்டில் துவங்கப்ப ட்டது. நுாறு ஆண்டுகளை எட்ட உள்ளது இந்த உணவகம்.
இந்த உணவகத்தில் பிரிட்டன் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத், இந்திய முன்னாள் பிரதமர் நேரு, இந்திரா உட்பட பல பிரபலங்கள் இங்கு உணவருந்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உணவகம் அமைந்துள்ள நிலம், பிரிட்டன் மன்னருக்கு சொந்தமான சொத்துக்களை நிர்வகித்து வரும் 'தி கிரவுன் எஸ்டேட்'க்கு சொந்தமானது என கூறப்படுகிறது. உணவகத்துக்கான ஒப்பந்தகாலம் கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்தது.
இந்நிலையில், அந்த உணவகம் அமைந்துள்ள கட்டடத்தின் மேல் தளங்களில் செயல்பட்டு வரும் அலுவலகங்களுக்கு, கூடுதல் வசதிகளை செய்து தரும் வகையில் தரை தளத்தில் உள்ள பகுதிகளை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால், உணவகத்துக்கான குத்தகை காலத்தை நீட்டிக்க கிரவுன் எஸ்டேட் நிறுவனம் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், உணவக உரிமையாளர்களும் தங்கள் பாரம்பரிய இடத்தை மாற்ற முடியாது என வாதிட்டு வருகின்றனர். மேலும், பாதுகாக்கப்பட்ட குத்தகை உரிமை சட்டத்தின் கீழ் சட்ட நடவடி க்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அடுத்தாண்டு இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. அதுவரை இந்த உணவகம் தொடர்ந்து இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்- உணவகத்திற்கு ஆதரவாக பிரிட்டனின் முன்னணி சமையல் கலைஞர்களான ரேமண்ட் பிளாங்க், மைக்கேல் ரூக் ஜூனியர் மற்றும் சைரஸ் தோடிவாலா ஆகியோர் வெளிப்படையாகக் குரல் கொடுத்துள்ளனர்.
ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க உணவகத்தை அலுவலக இடமாக மாற்றுவது அதன் புனிதத்தன்மையைக் கெடுக்கும் செயல் என்றும், இது லண்டனின் உணவகம் என்றும், சுற்றுலாத்துறைக்கு இது பெரிய இழப்பு என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
நீண்ட வரலாறு கடந்த 1926ல் லண்டனின் ரீஜென்ட் தெருவில் எட்வர்டு பால்மர் என்பரால் இந்த உணவகம் துவங்கப்பட்டது. பால்மர் ஒரு ஆங்கிலோ இந்திய ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி இவரது தாத்தாவின் தந்தை ஜெனரல் வில்லியம் பால்மர், இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங்சின் செயலராக இருந்தவர். இவரது பாட்டியின் தாய் ஒரு முகலாய இளவரசி. இந்த இரட்டை கலாசார பின்னணியில்தான் இந்த உணவகத்தின் முதல் 'மெனு' இருந்ததாகக் கூறப்படுகிறது- இந்த உணவகத்திற்கு, இவரது பாட்டியின் குடும்ப பெயரான 'வீரசாவ்மி' என பெயரிட திட்டமிருந்ததாகவும், ஆனால், அச்சிடும் போது ஏற்பட்ட எழுத்து பிழையால், 'வீராசாமி' என்ற பெயர் நிரந்தரமானது கடந்த 1934ல், பிரிட்டன் பார்லிமென்ட் உறுப்பினர் சர் வில்லியம் ஸ்டீவர்ட் என்பவர் இந்த உணவகத்தை வாங்கினார். சமையல் குறிப்புகள், கலைப்பொருட்கள் மற்றும் திறமையான பணியாளர்களை தேடி இந்தியா மற்றும் அண்டை நாடுகளுக்கு இவர் பயணம் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த உணவகம் இவரது தலைமையில் இருந்தபோது, முக்கியமான மற்றும் கவர்ச்சிகரமான உணவகமாக மாறியது கடந்த, 1937ல் வீராசாமி உணவகம் தான், இந்தியாவுக்கு வெளியே முதன்முதலில் தந்துார் அடுப்பை நிறுவிய இந்திய உணவகம் என கூறப்படுகிறது கடந்த, 1950ல் டப்பாவில் அடைக்கப்பட்ட முதல் இந்திய உணவை வீராசாமி அறிமுகப்படுத்தியது இதன்பின், கடந்த 1997ல் இந்த உணவகத்தை ரஞ்சித் மாத்ராணி மற்றும் நமிதா பஞ்சாபி ஆகியோரின் எம்.டபிள்யூ., ஈட் குழுமம் வாங்கியது. இவர்கள் உணவகத்தை நவீனப்படுத்தி, 1920களில் மகாராஜாக்களின் அரண்மனைகளை நினைவூட்டும் ஆடம்பர உட்புற தோற்றத்துடன் புதுப்பித்தனர் கடந்த, 2016ல், உணவக தொழில் துறையில் மிகவும் உயர்ந்ததாகவும், உலகளவில் அங்கீகரிக்கப்பட்டதாகவும் கருதப்படும் 'மிச்செலின் நட்சத்திரம்' விருதை பெற்றது. இவ்விருதை இன்று வரை தக்க வைத்துக்கொண்டுள்ளது.

