ஈரான் உளவு பார்ப்பதாக அச்சம்; மொபைல்போன் பயன்படுத்த அமெரிக்க வீரர்களுக்கு தடை
ஈரான் உளவு பார்ப்பதாக அச்சம்; மொபைல்போன் பயன்படுத்த அமெரிக்க வீரர்களுக்கு தடை
ADDED : ஜூலை 30, 2026 07:17 PM

வாஷிங்டன்: மேற்காசியாவில் ஈரானை ஒட்டியுள்ள பகுதிகளில் பணியில் உள்ள ராணுவ வீரர்கள் மொபைல்போன் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கூறியுள்ள அமெரிக்க அரசு, தடை விதிப்பது குறித்து ஆராய்ந்து வருகிறது.
மேற்காசிய நாடான ஈரான் - அமெரிக்கா இடையே ஹார்முஸ் ஜலசந்தி கட்டுப்பாடு தொடர்பாக போர் நடந்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்க ராணுவ வீரர்கள் தாங்கள் இருக்கும் இடங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை, தங்கள் சொந்த சமூக வலைதள பக்கங்களில் பதிவிடுவதை தவிர்க்குமாறு அமெரிக்க ராணுவ மத்திய கட்டளை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து கட்டளை மையம் விடுத்துள்ள செய்தி:அமெரிக்க வீரர்களின் மொபைல்போனில் இருந்து பகிரப்படும் படங்கள் மற்றும் வீடியோக்கள், அவர்கள் இருக்கும் இடத்தை ஈரான் தெரிந்து கொள்ள உதவக்கூடும். இதை வைத்து அவர்கள் தாக்குதல் நடத்துகின்றனர்.
மேலும், ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்கள் வெற்றி பெற்றதா இல்லையா என்பதையும் அந்நாடு எளிதில் தெரிந்து கொள்கிறது. ஆகையால், ஈரான் தன் தாக்குதலை தீவிரப்படுத்துவதற்கு இது உதவும் அபாயம் உள்ளது.இவ்வாறு தெரிவித்துள்ளது-.
மத்திய கட்டளை மையத்தின் இந்த எச்சரிக்கையால், பணியில் உள்ள வீரர்கள் தங்கள் மொபைல்போன்களை ஒப்படைக்க வேண்டியிருக்கலாம் என கூறப்படுகிறது. முழுமையான தடை விதிக்கப்படவில்லை என்றாலும், ஆயிரக்கணக்கான வீரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பேச முடியாமல் தவிக்கும் நிலை உருவாக உள்ளதை எண்ணி கவலை கொண்டுள்ளனர்.
