'அயர்ன் பீம்' ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பம் இஸ்ரேல் ராணுவத்தில் விரைவில் இணைகிறது
'அயர்ன் பீம்' ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பம் இஸ்ரேல் ராணுவத்தில் விரைவில் இணைகிறது
ADDED : டிச 02, 2025 01:12 AM

டெல்அவிவ்: தங்கள் நாட்டை நோக்கி வரும் வான்வழி அச்சுறுத்தல்களை முறியடிக்கும், 'அயர்ன் பீம்' ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பம், இம்மாத இறுதிக்குள் இஸ்ரேல் ராணுவத்துக்கு கிடைக்க உள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேல், ராணுவத் தொழில்நுட்பங்களில் முன்னிலையில் உள்ளது. ஏற்கனவே அதன், 'அயர்ன் டோம்' என்ற, ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பம் மிகவும் பிரபலம். இதைத் தவிர, வேறு சில ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி வருகிறது.
பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புடன், இரண்டு ஆண்டுகள் நீடித்த போரில், இதனால்தான், இஸ்ரேலுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
ஹமாசுக்கு ஆதரவாக, லெபனான், ஜோர்டான் என பல அண்டை நாடுகளில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் நடத்திய தாக்குதல்களையும் இஸ்ரேலால் சமாளிக்க முடிந்தது.
தன் வான் பாதுகாப்பு முறைகளை மேம்படுத்தும் வகையில், 'அயர்ன் பீம்' எனப்படும் லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய பாதுகாப்பு கவசத்தை உருவாக்கும் முயற்சி நடந்தது.
தற்போது அது முடிவடைந்துள்ளதால், இம்மாத இறுதியில், இஸ்ரேல் ராணுவத்துக்கு ஒப்படைக்கப்பட உள்ளதாக, இஸ்ரேல் ராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அயர்ன் பீம் எனப்படும் இரும்பு ஒளிக்கற்றை என்றழைக்கப்படும் புதிய தொழில்நுட்பம், லேசர் வாயிலாக எதிரியின் ஏவுகணைகளை அழிப்பதாகும். இதை நிறுவுவதற்கு மட்டுமே செலவாகும்; பயன்பாட்டுக்கு பெரிய அளவில் செலவாகாது.
அயர்ன் பீம் முறையில், லேசர்கள் பயன்படுத்தி, எதிரியின் ஏவுகணைகள் அழிக்கப்படும். இதனால், கிட்டத்தட்ட பயன்பாட்டு செலவே இருக்காது என்று கூறப்படுகிறது.
மேலும், இந்த புதிய முறை, மிகவும் நவீனமானதாக இருக்கும். மிகவும் குறைந்த துாரத்தில் இருந்து, பல கி.மீ., துாரத்தில் உள்ள எதிரியின் ஏவுகணைகளை அடையாளம் காண முடியும். இதைத் தவிர, மிகவும் துல்லியமாக தாக்குதல் நடத்தி, எதிரியின் ஏவுகணைகள் அழிக்கப்படும்.
இதற்காக, 4,460 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது.

