UPDATED : ஜூலை 08, 2026 09:50 PM
ADDED : ஜூலை 08, 2026 07:19 PM

மெல்போர்ன்: இந்தோனேஷியா பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி ஆஸ்திரேலியா சென்றடைந்தார்.
பிரதமர் மோடி அரசு முறை பயணமாக இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 6ம் தேதி இந்தோனேஷியா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் பிரபோவ் சுபியாண்டாவை சந்தித்து பேசினார். இரு தரப்பு உறவுகள் குறித்து விவாதித்த அவர், அந்நாட்டு பார்லிமென்ட், இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றினார். பிறகு ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலிலும் தரிசனம் செய்தார்.
இந்த பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி ஆஸ்திரேலியா சென்றடைந்தார். மெல்போர்ன் விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வரும் 10ம் தேதி வரை அந்நாட்டில் தங்கியிருக்கும் பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானீசை சந்தித்து இருதரப்பு உறவு குறித்து விவாதிக்க உள்ளார். தொடர்ந்து, இந்தியா ஆஸ்திரேலியா தொழில்முனைவோர் சந்திப்பில் தொழிலதிபர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார். இந்திய வம்சாவளியினர் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வலு
ஆஸ்திரேலியா சென்றடைந்த பிரதமர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது:ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் தரையிறங்கினேன். இந்த பயணம் இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான உறவுக்கு வலுசேர்க்கும். ஆஸி., பிரதமர் அல்பானீசுடனான பேச்சுவார்த்தையை ஆவலாக எதிர்பார்க்கிறேன். இந்திய வம்சாவளியினரை சந்திக்கும் வாய்ப்பும் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியர்கள் வரவேற்பு
மெல்போர்ன் வந்த பிரதமர் மோடியை இந்திய வம்சாவளியினர் வரவேற்றனர். இது தொடர்பாக பிரதமர் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: மெல்போர்ன் நகரில் வானிலை குளிராக இருந்தாலும், இந்திய சமூகத்தினரிடம் இருந்து கிடைத்த அன்பான வரவேற்பு உண்மையிலேயே மறக்க முடியாது. இந்தியா உடனான அவர்களின் பிணைப்பு ஆனது அளவற்ற மகிழ்ச்சியும்,பெருமைக்கும் தொடர்ந்து ஆதாரமாக விளங்குகின்றன.இவ்வாறு அப்பதிவில் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதன்பிறகு அவர் நியூசிலாந்து செல்ல உள்ளார்.
