வர்த்தக போர் தீவிரம்; சீன பொருட்களுக்கு 245 சதவீதம் வரி விதித்து டிரம்ப் அதிரடி
வர்த்தக போர் தீவிரம்; சீன பொருட்களுக்கு 245 சதவீதம் வரி விதித்து டிரம்ப் அதிரடி
ADDED : ஏப் 16, 2025 02:37 PM

வாஷிங்டன்: சீன பொருட்களுக்கு இதுவரை 145 சதவீதமாக இருந்த இறக்குமதி வரியை 245 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் பரஸ்பர வரி என்ற பெயரில் அனைத்து நாடுகளுக்கான இறக்குமதி வரியை உயர்த்தினார். இதற்கான அறிவிப்பை ஏப்ரல் 2ம் தேதி அதிபர் டிரம்ப் வெளியிட்டார். பின் அமெரிக்காவுடன் பேச்சு நடத்திய 60க்கும் மேற்பட்ட நாடுகளின் வரியை நிறுத்தி வைத்தார்.
பேச்சு நடத்த முன் வராத சீனாவுக்கு மட்டும் வரி உயர்வில் விலக்கு அளிக்கவில்லை. மாறாக சீனாவுக்கான வரியை 145 சதவீதமாக டிரம்ப் உயர்த்தினார். பதிலுக்கு சீனா அமெரிக்கா மீது 125 சதவீத வரி விதித்தது.
ஸ்மார்ட்போன், செமி கண்டக்டர் எனப்படும் மின்னணு சிப்கள், கணினிகள் ஆகிய உயர் தொழில்நுட்ப பொருட்களுக்கான வரியில் இருந்து மட்டும் சீனாவுக்கு அமெரிக்கா விலக்கு அளித்துள்ளது.
சீனா தன் உள்நாட்டு விமான நிறுவனங்களிடம் அமெரிக்காவில் இருந்து போயிங் மற்றும் பிற நிறுவனங்களின் விமானங்கள் மற்றும் உதிரி பாகங்கள் வாங்குவதை நிறுத்தி வைக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 16) சீன பொருட்களுக்கு இதுவரை 145 சதவீதமாக இருந்த இறக்குமதி வரியை 245 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. சீனாவின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பதிலடி கொடுப்பதற்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
அமெரிக்கா- சீனா ஆகிய இருநாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர் தீவிரம் அடைந்துள்ளது.

