ராசிபுரம்: "மஞ்சள் அறுவடையின் போது, தொழில் நுட்பங்களை கடைபிடித்து விவசாயிகள் பயன்பெறலாம்' என, வெண்ணந்தூர் ஒன்றிய தோட்டக்கலை உதவி இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தற்போது, மஞ்சள் பயிர் குறுகிய கால, மத்திய மற்றும் அதிக வயதுடைய ரகங்கள் அறுவடைக்கு வருகின்றன. இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவது மற்றும் இலைகள் காய்ந்து விடுவது போன்ற அறிகுறிகள் மூலம் மஞ்சள் முதிர்ச்சியை அறியலாம். மஞ்சள் அறுவடை ஜனவரியில் துவங்கி மார்ச் வரை நீடிக்கிறது.அறுவடை செய்யும் பத்து நாட்களுக்கு முன், தரையின் மேல்மட்டத்தில் தண்டு பகுதியை அறுத்து விடவேண்டும். அவ்வாறு செய்தால், விரைவில் ஈரப்பதம் குறைந்து மஞ்சள் முதிர்ச்சியடையும். மஞ்சளை சாணி நீர் கொண்டு வேகவைக்கக் கூடாது. வேகவைக்கும் தண்ணீர் அமிலதன்மை உடையதாய் இருந்தால், ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் சமையல் சோடா உப்பு சேர்த்து 45 நிமிஷம் வரை வேகவைக்க வேண்டும்.அறுவடைக்கு பின், மஞ்சளை சேமிப்பது ஒரு முக்கியமான தொழில் நுட்பமாகும். விதைக்கு தேர்வு செய்யும் மஞ்சளை, கிழங்கு அழுகல் நோய் தாக்காத தோட்டங்களில் இருந்து தேர்வு செய்ய வேண்டும். அதை கார்பன்டசிம் மருந்து கரைசலில் ஒரு கிராம் மற்றும் மானோ குரோட்டபாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு மி.லி., என்ற அளவில் கலந்து தயாரிக்கப்பட்ட கரைசலில் 20 நிமிஷம் நனைத்து சேமிக்க வேண்டும்.அதனால், விதை மஞ்சளை கிழங்கு மற்றும் செதில் பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம். மஞ்சள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இத்தொழில் நுட்பங்களை கடைபிடித்து பயன் பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.