தஞ்சாவூர்: தஞ்சையில் இருந்து, கும்பகோணம் செல்லும் சாலையில், கொண்டவிட்டான்திடல் பஞ்சாயத்தில், தாழக்குடி கிராமம் உள்ளது. இங்குள்ள வெட்டாற்றில், உறை கிணற்றின் தடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இது குறித்து, சரஸ்வதி மகால் நூலகத் தமிழ்ப்பண்டிதர் மணி மாறன் கூறியதாவது:சோழர்கள் காலத்தில், நீர்மேலாண்மைச் செயல்பாடுகள், உச்ச நிலையில் இருந்தது. ஆறுகளின் குறுக்கே, கற்களைக் கொண்டு அணைகள் கட்டுவதும், ஆற்றிலிருந்து கிளை வாய்க்கால்கள், ஏரி, குளங்களுக்கு நீர் கொண்டு செல்லப்பட்டு பயன்படுத்தப்பட்டது.மேலும், அவற்றிலிருந்து வெளியேறும் உபரி நீரினை, கலிங்குகள் வழியாக மீண்டும் ஆறுகளுக்கே கொண்டு செல்வதும், ஏரி, குளங்களில் நீரினை வெளியேற்றுவதற்கான தூம்புகள் அமைப்பதும், குளங்களின் தரை மட்டப்பகுதிகளில் கிணறுகள் அமைக்கும் வழக்கமும், நடைமுறையில் இருந்தது.நீர் வற்றிய கோடைக்காலங்களில், இக்கிணறுகளிலிருந்து, நீரினை இறைத்துப் பயன்படுத்தினர். கும்பகோணம் மகாமகக் குளத்தின் உள்ளேயும், தஞ்சை ஐயங்குளத்தின் உள்ளேயும், கிணறுகள் இருப்பதைக் காணலாம்.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், பிற்காலச் சோழர்களின் வாழ்விடமாகத் திகழ்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆயிரத்தளி என்ற பகுதி, இன்றைய கண்டியூருக்கு அடுத்து அமைந்துள்ள வீரசிங்கம்பேட்டை பகுதியில், கால்வாயின் பல்வேறு இடங்களில், உறை கிணறுகள், 20 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.தாழக்குடி பகுதியில், வெட்டாற்றில் சோழர் காலத்திய, உறை கிணறு இருப்பது கண்டறியப்பட்டது. கிணற்றின் விளிம்பிலிருந்து, ஒரு அடி விட்டமும், இரண்டு அடி நீளமும் கொண்ட சுடுமண் குழாய்கள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி, ஆற்றின் கரையை நோக்கி கொண்டு செல்லப்பட்டுள்ளது.உடைந்த உறை கிணற்றில் உள்ள சுடுமண்ணின், இரண்டு பக்கங்களிலும் சிவப்பு நிறமும், உட்பகுதியில் கறுப்பு நிறமும் இருப்பது, சோழர் காலத்திய கட்டுமான தொழில் நுட்பம். இத்தகைய தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறை, ஆற்றில் மணல் அற்றுப்போனதால், நன்றாகக் காண முடிகிறது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE