தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூரில், பெருங்கற்கால புதிர்நிலையை, கிருஷ்ணகிரி தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம் மற்றும் பெண்ணையாறு தொல்லியல் சங்கம் சார்பில், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் தொல்லியல் குறித்து அகழாய்வு நடத்தப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த சுகவனமுருகன் மற்றும் பெண்ணையாறு தொல்லியல் சங்கத்தை சேர்ந்த சதானந்தம் கிருஷ்ணகுமார் ஆகியோர், கம்பைநல்லூரில், 2,500 ஆண்டு பழமை வாய்ந்த பெருங்கற்கால புதிர் நிலையை கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து, தொல்லியல் ஆய்வாளர் சுகவன முருகன் கூறியதாவது:
புதிர்நிலைகள் என்பது, மையத்தில் விடையை கொண்டு உள் மற்றும் வெளிச்செல்ல இயலாத பல்வேறு சூழ்நிலை பாதைகளுடன் விளங்குபவையாகும். வட்டப்புதிர் வழிகள் ஏறத்தாழ, 5,000 ஆண்டு பழமையானது. உதாரணமாக, மகாபாரதத்தில் அபிமன்யு சிக்கிக்கொண்டு, உயிரிழந்த சக்கரவியூகம், இவ்வாறான புதிர்நிலையாகும். தென்னிந்தியாவில், முதன்முதலில் கிருஷ்ணகிரி பகுதியில் வட்டப்புதிர் நிலை கண்டுபிடிக்கப்பட்டது. உலகில் கண்டுபிடிக்கப்பட்ட புதிர்நிலைகளிலேயே இது பெரியதாகும். ஏறத்தாழ, 80க்கு 80 அடி பரப்பில் உள்ளது. இன்றும், மக்கள் வழிபாட்டில் உள்ளது. இது, பழமையான வழிபாட்டு தலங்களில் ஒன்றாக இருக்கக்கூடும். அரசனால், சிறைபடுத்தப்பட்ட கணவனை, உயிருடன் மீட்ட மனைவியின் கதை என்றார்.