திண்டுக்கல்:பருத்தியை அதிகளவு சேதபடுத்தும் பூச்சிகளை ஒழிக்க புகையிலை மற்றும் காய்கறிகளை கொண்டு தயாரிக்கப்படும் "அக்னி அஸ்திரம்' என்ற இயற்கை முறை பூச்சிக்கொள்ளி கரைசல் விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காந்திகிராம பல்கலை அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறியதாவது: பருத்தி சாகுபடி துவங்கி விட்டதால் பூச்சிகளின் தாக்குதல் அதிகரிக்கும். இதனால் தரமான பஞ்சு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். பூச்சிகளை ஒழிக்க இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட "அக்னி அஸ்திரம்' கரைசலை விவசாயிகள் பயன்படுத்தலாம். பூச்சிகள் செடிகளின் அருகில் வராமல் ஓடி ஒளிந்து கொள்ளும்."அக்னி அஸ்திரம்'பசையை தயார் செய்ய புகையிலை ஒரு கிலோவும், வேப்பஇலை 5 கிலோவும், பச்சை மிளகாய் 2 கிலோவும், பூண்டு ஒரு கிலோவும் சேர்த்து "பேஸ்ட்' மாதிரி அரைத்து எடுக்க வேண்டும். அதை 20 லிட்டர் மாட்டு கோமியத்துடன் கலந்துவைக்க வேண்டும். பிறகு நன்றாக கொதிக்க வைத்து 48 மணிநேரத்திற்கு பிறகு அதை 100 லிட்டர் தண்ணீரில் கரைத்து நேரடியாக பருத்தி செடிகளில் தெளிக்க வேண்டும். விவசாயிகள் இதை முறைப்படி செய்தால் மகசூல் அதிகரிப்பதோடு தரமான பஞ்சினை பெற்று பயன் அடையலாம். பூச்சிகளும் அண்டாது,' என்றார்.