புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., அரசின் அடுத்த அதிரடியாக, பணக்காரர்களுக்கு சமையல், 'காஸ்' சிலிண்டர்களுக்கு வழங்கப்படும் மானியம் ரத்து செய்யப்பட உள்ளது. ஆனாலும், இந்த பணக்காரர்களுக்கான வரைமுறை என்ன என்பது குறித்து, அதிகாரபூர்வமான முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.
தற்போது, சமையல் காஸ் சிலிண்டர்கள், நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்குமே மானிய விலையில் தான் தரப்படுகிறது. பெரும் பணக்காரர்களும்
இந்த சலுகையை அனுபவிக்கின்றனர்.இதை முறைப்படுத்தும் வகையில், பணக்காரர்களுக்கான மானியத்தை ரத்து செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
டில்லியில் நேற்று நடந்த ஒரு விழாவில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அருண் ஜெட்லி கூறியதாவது:அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க, பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, என்னைப் போன்ற பெரும் பணக்காரர்களுக்கு, சமையல் காஸ் சிலிண்டர்களுக்கு வழங்கப்படும் மானியத்தை ரத்து
செய்யதிட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முடிவு, விரைவில் அறிவிக்கப்படும். சமையல் காஸ் சிலிண்டர் மானியம் பெற தகுதியானவர்கள், தகுதியற்றவர்கள் யார் யார் என்பது பற்றிய வரைமுறை விரைவில்
அறிவிக்கப்படும்.இது, தே.ஜ., கூட்டணி அரசின் கொள்கைகளில் ஒன்று. உறுதியான
முடிவுகளை எடுக்கக் கூடிய அரசியல் தலைவர்கள் இருந்தால், எந்த ஒரு சிரமமான
முடிவையும் எளிதாக எடுக்க முடியும். தேவையற்ற மானியத்தை ரத்து செய்வது
தொடர்பாக, முடிவு எடுப்பதற்காக, காலத்தை வீணாக்க இந்த அரசு விரும்பவில்லை.
மத்திய அரசின் இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் தொடரும்.இவ்வாறு, ஜெட்லி
கூறினார்.
பெரும் சுமை குறையும்!
பொது வினியோக திட்டம்
மற்றும் சமையல் காஸ், டீசல், உரம் போன்ற பொருட்களுக்காக கடந்த பட்ஜெட்டில்,
3.60 லட்சம் கோடி ரூபாய் மானியமாக, மத்திய அரசின் சார்பில் ஒதுக்கப்பட்டது.இந்த அதிகப்படியான மானியத்தால், கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் சூழ்நிலை, மத்திய அரசுக்கு உருவாகி உள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, மானிய திட்டங்களில் நடக்கும் குளறுபடிகளை தடுப்பதுடன், தேவையற்ற மானியங்களையும் ரத்து செய்வதற்கு, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.சமீபத்தில் டீசல்
விலையை நிர்ணயம் செய்யும் பொறுப்பை, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களிடமே, மத்திய அரசு ஒப்படைத்தது.இதனால், அரசின் மானிய தொகையில், 15 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளது.
மானியம் யாருக்கு ரத்து?
'வருமான வரி
செலுத்தும் அனைவருக்கும் மானியம் ரத்தாகலாம்' என, ஒரு தரப்பினர்
கூறுகின்றனர். ஆனால், 'என்னை போன்ற பணக்காரர்கள்' என, ஜெட்லி
கூறியுள்ளதால், 'ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் வருமான வரி செலுத்தும்
பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே மானியம் ரத்து ஆகும்' என, அரசு
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு சிலிண்டருக்கு 432 ரூபாய்!
தற்போது சென்னையில், மானிய விலையிலான சமையல் காஸ் சிலிண்டர், 404 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.இந்த சிலிண்டரின் சந்தை மதிப்பு, 836 ரூபாய். வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும், 404 ரூபாய் போக, மீதமுள்ள, 432 ரூபாயை, மத்திய அரசே மானியமாக பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு செலுத்துகிறது.தற்போது, ஓர் ஆண்டுக்கு, 12 சிலிண்டர்கள் மானிய விலையில் தரப்படுகின்றன.
தற்போதைய மானியங்கள்:
*பொது வினியோக திட்டத்தின் கீழ் பொருட்களை வழங்குவதற்காக மட்டும், 1.25 லட்சம் கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.
*சமையல் காஸ், மண்ணெண்ணெய் போன்ற பெட்ரோலிய பொருட்களுக்காக, 97 ஆயிரம் கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.
*உரத்துக்கு, 66 ஆயிரம் கோடி ரூபாயும், மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களுக்காக, 60 ஆயிரம் கோடி ரூபாயும் மானியமாக வழங்கப்படுகிறது.