''மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் பற்றி எல்லாம் பேச, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்கு எந்த உரிமையும் கிடையாது; காரணம், அவருக்கு, பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியாது,'' என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கொந்தளித்தார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு, ஸ்டாலின் அளித்த பேட்டி தொடர்பாக, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறியதாவது:மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகள், குறிப்பிட்ட சில தொழில் அதிபர்களுக்கு மட்டுமே உதவுவது போல இருப்பதாக, ஸ்டாலின் குறிப்பிட்டு, அது ஏழைகளை பாதிக்கும் என, கூறியுள்ளார்.அது குறித்தெல்லாம் சொல்வதற்கு, அவர் எந்த பல்கலைக் கழகத்தில், பொருளாதார பாடம் படித்தார் என, தெரிவிக்க வேண்டும். அவர் எதற்கு, திடீரென, இந்த வேண்டாத வேலையெல்லாம் பார்க்க வேண்டும்.ஏழைகளைப் பற்றி கவலைப்படும் ஸ்டாலின், இதுவரையில் ஏழைகளுக்காக என்ன செய்தார் என்பதை பட்டியல் போட முடியுமா? மோடி அரசை குறை சொல்ல வேண்டும் என்பதற்காக, அவர் எதையாவது சொல்ல புறப்பட்டிருக்கிறார்.
அவரிடம், ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நான் கேட்கிறேன். கிட்டதட்ட நுாற்றுக் கணக்கான தொழில்களில், ஸ்டாலின் மற்றும் கருணாநிதி குடும்பம் முதலீடு செய்திருக்கிறது. அதில், ஒரு சிலவற்றை மட்டுமே இங்கே பட்டியலிடுகிறேன்.அந்த தொழில்களுக்கு, மோடி அரசு உதவிடும் வகையில் பொருளாதார கொள்கைகள் இருந்தால் தான், அதை அவர் ஏற்றுக் கொள்வாரா?
1.சென்னை, மண்ணிவாக்கம் கிராமத்தில் இருக்கும், 300 ஏக்கரின் மதிப்பு, 4.5 கோடி. இந்த இடத்தை ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்ய முற்பட்டுள்ளனர்.
2. 'ராயல் பர்னிச்சர்' என்ற பெயரில் இயங்கும் நிறுவனத்தின் மதிப்பு, -10 கோடி ரூபாய்.
3.சென்னை, நுங்கம்பாக்கத்தில் இருக்கும் ஸ்டாலின் மகன் உதயநிதியின், 'ஸ்னோ பவுலிங்' சென்டரின் சொத்து மதிப்பு,- 2 கோடி ரூபாய்.
4.சென்னை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும், எம்.எம்.இண்டஸ்ட்ரீசின் மதிப்பு, -2 கோடி ரூபாய்.
5. ஆறு கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்திருக்கும் கோடம்பாக்கம், 'முரசொலி' அலுவலக கட்டடத்தின் மதிப்பு, -20 கோடி ரூபாய்.
6.கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும், 11 சதவீத பங்குகளின் மதிப்பு, -50 கோடி ரூபாய்.
7.சென்னை, பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும், 'ரெயின்போ இண்டஸ்ட்ரீஸ்' மதிப்பு, -48 கோடி ரூபாய்.
8.எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு, -பல கோடி ரூபாய்.
9.முரசொலி அறக்கட்டளை -மதிப்பு, பல கோடி ரூபாய்
10. மதுரை, மாடக்குளம் கிராமத்தில், தயாளு அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு, -பல கோடி ரூபாய்.
11. மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும், தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு, பல கோடி ரூபாய்.
12. மதுரையில், ஐந்து கிரவுண்டில் இருக்கும், எட்டு மாடிகள் கொண்ட, 'தயா சைபர் பார்க்' மதிப்பு, -பல கோடி ரூபாய்.
13.மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும், 'தயா டெக்னாலஜிஸ்' என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு,- 1 கோடி ரூபாய்.
14.சென்னை, அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271-ஏ) மதிப்பு, -5 கோடி ரூபாய்.
15.'வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்' என்ற கம்பெனியில் இருக்கும் பங்கின் மதிப்பு, 20 கோடி.
16.ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும், 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு,- 50 கோடி ரூபாய்.
17.கலைஞர், 'டிவி'-யில் இருக்கும், 100 கோடி ரூபாய் மதிப்பு பங்குகள்.
18.பல கோடி மதிப்புள்ள, கூர்க் (குடகு மலை) காபி தோட்டம்.
20.தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும், மல்டிப்ளெக்ஸ் கட்டவும் திட்டமிட்டுள்ளனர்.
இப்படிப்பட்ட தொழில்களை அமைப்பதற்கும், சொத்துகளை வாங்கிக் குவிப்பதற்கும், தி.மு.க., தரப்பில் அடித்த கூத்துக்களும் கொள்ளைகளும், ஊர் உலகத்துக்குத் தான் தெரியுமே. அதன்பிறகும், அவர்கள் ஏன், பா.ஜ., அரசு மீது தேவையில்லாமல் குற்றம் சாட்ட வேண்டும்?தொடர்ந்து தவறு மேல் தவறு செய்ததால் தான், பிரச்னை மேல் பிரச்னைகளை, தற்போது அவர்கள் சந்தித்து வருகின்றனர். பா.ஜ., அரசு மீது அவர் இனியாவது குற்றம், குறை சொல்வதை குறைத்துக் கொள்ள வேண்டும்.இல்லையெனில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், தி.மு.க., செய்த ஊழல்களை தொடர்ந்து பட்டியல் போட்டு, அதை மக்களிடம் கொண்டு செல்லும் பணியை மீண்டும் துவக்க வேண்டியிருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் -